சென்னையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உணர்வுப் பூங்காவை ஆய்வு செய்து குழந்தைகளுடன் கலந்துரையாடிய அமைச்சர்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோட்டூர் கார்டனில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உணர்வு பூங்காவினை அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-170க்குட்பட்ட கோட்டூர்புரம், கோட்டூர் கார்டன் முதல் குறுக்குத் தெருவில் விளையாட்டுப் பகுதியுடன் கூடிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உணர்வு பூங்காவினை கடந்த 12ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.   

இதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று இந்த உணர்வு பூங்காவினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு விளையாடும் குழந்தைகளிடம் கலந்துரையாடினார்கள். 

பின்னர் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது;

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-170க்குட்பட்ட கோட்டூர்புரம், கோட்டூர் கார்டன் முதல் குறுக்குத் தெருவில் மூலதன நிதியின் கீழ் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் 2,526 ச.மீ. பரப்பளவில் விளையாட்டுப் பகுதியுடன் கூடிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உணர்வு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவில் முளை வளர்ச்சி/புற உலக சிந்தனை குன்றிய குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் திறன்கள் மேம்படும் வகையில் நடைபயிற்சி வசதிகளும், பாத சிகிச்சை நடைமுறை உள்ள இருதரப்பு ஒருங்கிணைப்பு பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு நடைபயிற்சி திறன் மேம்படும் வகையில் முடிவில்லா நடைபயிற்சி வசதிகளும், பெருமூளை வாத குறைபாடு உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் கூடை ஊஞ்சல் வசதிகளும் உள்ளன. 

மேலும், சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் குழந்தைகள், சக நண்பர்களுடன் மணலில் விளையாட ஏதுவாக மணலுடன் கூடிய பகுதிகளும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் சக்கர நாற்காலியுடன் ஊஞ்சல் ஆடும் வகையில் சக்கர நாற்காலி ஊஞ்சல் வசதியும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலும், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த வழக்கமான முறையிலும் கூடைப்பந்து திடல் வசதியும், பார்வை குறைபாடு மற்றும் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இசை ஒலி எழுப்பும் குழாய்கள் வசதியும், பார்வை குறைபாடு மற்றும் சாதாரண குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில் குழாய் தொலைபேசி வசதியும், மரத்தின் நிழலில் மேசை விளையாட்டுகளுடன் கூடிய இருக்கைகளுடன் விளையாடும் வகையில் அமைதி மண்டலமும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த உணர்வு பூங்காவினை சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பயன்படுத்த மேற்கண்ட அனைத்து வசதிகளுடன் விளையாட்டு உபகரணங்கள், கண்காணிப்பு புகைப்படக் கருவி (CCTV) மற்றும் சுகாதார வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் தெரிவித்தார். 

முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் வார்டு-170க்குட்பட்ட பீலியம்மன் கோயில் தெருவில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் 2020-21ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும், ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீத்தார் வழிபாட்டு மையத்தினையும் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், மேயர் திருமதி ஆர்.பிரியா, துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி உட்பட பலர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Physically challenged children park


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->