மணல்கொள்ளையை தடுத்த பொதுமக்கள்!. ஊழலற்ற தமிழகம் வேண்டுமென்றால்? மக்கள் இவ்வாறு உஷாராக இருக்கவேண்டும்!.
மணல்கொள்ளையர்களை சிறைபிடித்த ஊர் பொதுமக்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி, அதனை வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்ந்துவந்தது.
அதனை தடுக்க நடவடிக்கை வேண்டும் என்று அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை விராலிமலை அருகே உள்ள குளத்தாத்துப்பட்டி ஆற்று பகுதியில் ஒரு லாரியில் சிலர் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த லாரியை சிறைபிடித்தனர். அப்போது அந்த வழியாக மேலும் 7 லாரிகள் மணல் அள்ளுவதற்காக அந்த பகுதியில் வந்து கொண்டிருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த 7 லாரிகளையும் சிறைபிடித்து, 2 லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பின்னர் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர், விராலிமலை தாசில்தார், மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மணல் அள்ளப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனையடுத்து பொதுமக்கள் சிறைபிடித்த 8 லாரிகளையும் பறிமுதல் செய்து, விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
people protest on road for soil theft