இதோ தமிழ்நாட்டில் வந்து விட்டது, புதிய அற்புதமான சுற்றுலாத் தலம். இனி மன்னார் வளைகுடா தீவுகளை, நேரில் சென்று ரசிக்கலாம்…!
New tourist places and islands in Ramnad area
வார விடுமுறை ஆகட்டும். பள்ளி விடுமுறை உள்ளிட்ட விடுமுறை நாட்களில், சுற்றுலா செல்வதைத் தான் மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். அதிலும், கடல் சார்ந்த தீவுகளுக்குச் செல்ல கொள்ளை ஆசை தான். அதற்கான வாய்ப்பும் அருகிலே அமைந்து விட்டால் இன்னும் மகிழ்ச்சி தானே!
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல், துாத்துக்குடி வரையில் உள்ள கடல் பகுதியில் 21 தீவுகள் அமைந்துள்ளன.
பாம்பன் நிலப் பகுதியை அடுத்து சிங்களத் தீவு, குருசடைத் தீவு, பூமரிச்சான் தீவு உள்ளிட்ட 21 தீவுகளில், உள்ள நிலப்பரப்பில், மாங்குரோவ் காடுகள் அதிகம் உள்ளன.
இந்த தீவுகளின் அருகில் உள்ள கடல் பகுதிகளில், பவளப் பாறைகள் அதிக அளவில் உள்ளன. அரிய கடல் வாழ் உயிரினங்களும் இந்தப் பகுதியில் மிகுதியாக உள்ளன. மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக வனத் துறையினர், இந்த தீவுகளுக்குச் செல்ல தடை விதித்திருந்தனர். மேலும், இங்கு எந்த வித சுற்றுலா வசதிகளும், இது வரை செய்யப்படவில்லை.
அழகும், பசுமையும், இயற்கை எழில் சூழ்ந்த இந்த கடல் தீவுகளில் இறங்கிப் பார்வையிடவும், கடலுக்குள் உள்ள பவளப் பாறைகள், மற்றும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை நேரில் காணும் பார்வையிடும் வகையில், சுற்றுலாப் படகு போக்குவரத்து துவங்க, மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின காப்பகம், நடவடிக்கைகள் மேற் கொண்டுள்ளது. இதற்காக மத்திய அரசும் சம்மதித்துள்ளது.
இந்தப் படகுப் போக்குவரத்து, ராமேஸ்வரம் குந்துகால் பகுதியில் இருந்து துவக்க, ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கடற்கரையில் இருந்து 100 மீட்டர் துாரத்திற்கு, பனை மரத்தில் ஆன, ஜெட்டிப்பாலம், பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ளது.
அதே போல், அந்தந்த தீவுகளில் படகுகளை நிறுத்துவதற்கும், இறங்கிப் பார்வையிடவும், கரையோரப் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் மார்ச் மாத இறுதிக்குள் இந்தப் பணிகள் நிறைவு பெற்று விடும்.
வரும் கோடை விடுமுறைக்கு, குடும்பத்துடன் தீவுகளைச் சென்று குதுாகலத்துடன் பார்வையிட, இப்போதே பயணத் திட்டம் தயாரித்து விட்டீர்களா?
English Summary
New tourist places and islands in Ramnad area