மீண்டும் தலைதூக்கிய நியூட்ரினோ! அதிரடியாக களமிறங்கிய ஆய்வு மைய இயக்குநர்.!! அடுத்து என்ன.?!
மீண்டும் தலைதூக்கிய நியூட்ரினோ! அதிரடியாக களமிறங்கிய ஆய்வு மைய இயக்குநர்.!! அடுத்து என்ன.?!
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் ஒருமித்த எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் நியூட்ரினோ திட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று கூறி, திட்டத்தை தொடங்க அனுமதிக்கலாம் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதோடு மட்டுமல்லாது இந்த திட்டத்திற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நாள்தோறும் 340 கி.லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்று சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்தாலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், விலங்குகள் நலவாரியம் ஆகியவற்றிடம் முறையான அனுமதியைப் பெற்ற பின்னரே திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நில அதிர்வு, தீவிபத்து மற்றும் கட்டுமானப் பணிகள் தொடர்பான அனுமதிகளையும் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் விவேக் தத்தார், தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டம் பற்றி விளக்க செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார், அப்போது அவர் கூறியதாவது, ''நியூட்ரினோ ஆய்வினால் எந்த ஒரு சுற்று சூழல் கேடும் இருக்காது. மேலும் இது ஒரு ஆய்வு மட்டுமே இதில் எந்த விதமான கதிர்வீச்சும், பாதிப்பும் மக்களுக்கு இருக்காது.
விரிவாக சொன்னால், வளிமண்டலத்தில் உள்ள நியூட்ரினோ துகள்களை கணக்கிடுவதுதான் இந்த ஆய்வின் நோக்கமே தவிர வேறு எந்தவிதமான தொழில் நோக்கமும் இந்த ஆய்வில் இல்லை. இந்த திட்டத்தின் செயல்பாடுகளை மாணவர்கள், பொதுமக்கள்,கல்லூரி ஆசிரியர்கள் என யார் வேண்டுமானாலும் வந்து நேரடியாக பார்வையிடலாம்.
இந்த ஆய்வானது, பூமியை துளைத்து நடத்தப்படுவதில்லை. அந்த மலைக்கு அடி பகுதியில் நடத்தப்படுக்கிறது. இந்திய மாணவர்களாலும், இந்திய ஆய்வுகூடங்களில் உருவாக்கப்படவிருக்கும் கருவிகளும் மட்டுமே இந்த ஆய்விற்காக பயன்படுத்தவிருக்கின்றது'' என தெரிவித்துள்ளார்.