சிற்பக் கலைக்குப் பெயர் போன சிகாநாதர் ஆலயம்..!
சிற்பக் கலைக்குப் பெயர் போன சிகாநாதர் ஆலயம்..!
புதுக்கோட்டையைச் சுற்றிலும், அழகிய செந்நிறக் குன்றுகள் உள்ளன. இந்தக் குன்றுகளில் எல்லாம், நம் முன்னோர்கள், கலை அம்சங்களைக் கொட்டி வார்த்தது போல, சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கக் கூடிய வகையில், ஒவ்வொரு சிற்பமாக பார்த்து வடித்துள்ளார்கள்.
புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள, குடுமியான் மலைக் கோயிலும் சிற்பக் குவியலைத் தன்னுள் அடக்கி உள்ளது. பாண்டிய மன்னர்களின் காலம் தொட்டு, தொண்டைமான்களின் ஆட்சிக் காலம் வரையிலும், இந்தக் கோயில், படிப்படியாக, திருப்பணிகள் செய்யப்பட்டு, விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது.
இந்த சிகாநாதர் – அகிலாண்டேஸ்வரி ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், தென்படும் மண்டபத் துாண்களில் உள்ள சிற்பங்கள் எல்லாம், கண்களில் ஒற்றிக் கொள்ளும் அளவிற்கு, மிக அற்புதமாக, மிக நுணுக்கமாக ஒவ்வொரு சிலையும் வடிக்கப் பட்டுள்ளது.
மோகினி உருவெடுத்து, அன்னப் பறவையில் பயணிக்கும் விஷ்ணு, பன்னிரு கைகளுடைய தமிழ்க் கடவுள் முருகனின் சிலை, பெரிய கிளி வாகனத்தில், ஏறி விண்ணுலகம் பயணிக்கும் இந்திரன் சிலை, அகோர வீர பத்திரர் சிலை என, எண்ணில் அடங்காத சிற்பங்கள் இந்தக் கோயில் வளாகம் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன.
கோயிலின் உள்ளே, உள்ள மலையை ஒட்டிய பகுதியில் குடைவரைக் கோயில் உள்ளது. இது கி.பி.8-ஆம் நுாற்றாண்டில் உருவாக்கப் பட்டுள்ளது. இங்கே நடுநாயகமாக சிவன், லிங்க ரூபத்தில் வீற்றிருக்கிறார்.
அதற்கு மேலே உள்ள மலைப் பகுதியில் நடுநாயகமாக சிவபெருமானும், உமையவளும், காளை வாகனத்தில் வீற்றிருக்க, அவர்களுக்கு இரண்டு புறங்களிலும், 63 நாயன்மார்கள் வணங்கிய நிலையில் இருக்கிறார்கள்.
இவையெல்லாம் அந்த மலையில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. இந்த மாதிரியான சிறந்த கற்பனைத் திறனுடன், சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும், இந்த சிற்பங்களை நாள் முழுதும் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காது என்பதே, கண் கூடான உண்மை!
English Summary
MOST BEAUTIFUL STATUE TEMPLE