சிறுமியுடன் திருமணம்.! புதுமாப்பிள்ளை மரணம்.! சோகத்தில் மூழ்கிய குமரி மாவட்டம்..!!
சிறுமியுடன் திருமணம்.! புதுமாப்பிள்ளை மரணம்.! சோகத்தில் மூழ்கிய குமரி மாவட்டம்..!!
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பாறவிளையை சேர்ந்தவர் வினு இவருக்கு வயது 31, இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, தக்கலை அருகே கோழிப்போர்விளையை சேர்ந்த ஒரு பெண்ணுடன், நேற்று முன்தினம் காலையில் இருவருக்கும் இரு வீட்டினரின் முன்னிலையில், மண்டைக்காட்டில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து, அன்று மாலை மார்த்தாண்டத்தில் உள்ள மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் மணமகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். வரவேற்பு உற்சாகமாக நடந்துகொண்டிருந்த நிலையில், மணப்பெண்ணுக்கு 16 வயதே ஆவதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதாவுக்கு தகவல் கிடைத்து உடனடியாக, அதிகாரி குமுதா மற்றும் சமூக நல அதிகாரி பியூலா, சைல்டு லைன் அமைப்பினர் திருமண வீட்டுக்கு விரைந்து சென்றனர்.
திருமணம் குறித்து மணப்பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, அந்த பெண்ணுக்கு 16 வயதே ஆகிறது என தெரிந்து கொண்ட அதிகாரிகள், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து, வினுவையும், சிறுமியையும் நாகர்கோவிலுக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்து இருப்பதாகவும், தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். பின்பு அந்த சிறுமி நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், அந்த அதிகாரிகள் வினுவுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அன்று இரவு சோகத்துடன் வீட்டுக்கு வந்த வினு தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், அவர் பெற்றோர் அறையின் கதவை தட்டினர், உள்ளிருந்து சத்தமும் வரவில்லை, எனவே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார் வினு. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வினுவின் உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்கள், நடத்திய விசாரணையில், திருமண வரவேற்பின் போது அதிகாரிகள் தலையிட்டு மணப்பெண்ணை பிரித்துச் சென்றதால் ஏற்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
Marry with the girl New marriage death Kumari district sank in the tragedy