புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி!! அதிகாரபூர்வ அறிவிப்பு!!
Krishnasamy says pnk will competitive in irataiilai
1996 ஆம் ஆண்டு சுயேச்சையாக ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற்று தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதைப்போலவே, தென்காசி பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
நடக்கவிருக்கும் 2019ஆம் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி தன்னை இணைத்துக் கொண்டார். தொகுதி பங்கீடு குறித்து பேசி இறுதி செய்யப்பட்டது. அதில் தென்காசி மக்களவைத் தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டது.
அவர், தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மக்களவைத் தேர்தல் அலுவலரான பூ.முத்துராமலிங்கத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர், அவர் "செய்தியாளர்களிடம் தென்காசி மக்களவை தொகுதியில் நான் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருக்கிறேன். புதுச்சேரி மற்றும் தமிழகம் உட்பட 40 தொகுதிகளிலும் எங்களது கூட்டணி மகத்தான வெற்றியை பெறும்.
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது உறுதி. மேலும், தமிழகத்தில் 18 சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அதிலும் அதிமுக வெற்றி பெறும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்கும்.
மேலும், 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் மீண்டும் பழனிசாமி முதலமைச்சராக இருப்பார். தென்காசி மக்கள் மகத்தான வெற்றியை எனக்கு பரிசளித்து தென்காசி மக்களின் வாழ்வை மேம்படுத்த எனக்கு உதவ வேண்டும்.
நான் தென் தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். தென் தமிழகத்தின் முகவரியை நான் மாற்றியமைப்பேன்" என அவர் கூறினார்.
பின்னர், "எங்கள் கூட்டணியின் முடிவின்படி தான் நான் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறேன்" என தெளிவாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
English Summary
Krishnasamy says pnk will competitive in irataiilai