கும்பகோணத்தில் பரபரப்பு!! பணம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தல்!!
Kidnapping in kumbakonam
கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் வேலன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் என்பவரின் மகள் சுபபிரியா(21). இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் படித்து வந்தார்.
நேற்று வழக்கம் போல் சுபபிரியா கல்லூரிக்கு சென்றார். அதன்பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கு சென்ற மகள் வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்து அவரது தாய் சித்ரா பல இடங்களில் தேடி பார்த்தார்.
எங்கு தேடியும் சுபபிரியா கிடைக்கவில்லை. பின்பு கும்பகோணத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கும் சென்று மகளை தேடி பார்த்தனர். அங்கும் அவர் இல்லை.
இதற்கிடையே சுபபிரியாவின் செல்போன் எண்ணில் இருந்து நேற்று மாலை ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்த குறுஞ்செய்தி சுபபிரியாவின் தாய் சித்ரா படித்தார்.
அதில், உங்களது மகள் சுபபிரியாவை கடத்தி வைத்துள்ளோம். எங்களுக்கு ரூ.30 லட்சம் கொடுத்து உங்கள் மகளை மீட்டு கொள்ளுங்கள். அவ்வாறு பணம் கொடுக்கவில்லை என்றால் மாணவியின் உடலை வீட்டுக்கு அனுப்புவோம்’ என்று குறிப்பிட்டு இருந்தது.
அதை படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா, உடனடியாக அருகில் உள்ள பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவியை கடத்திய கும்பல், அவரது பெற்றோருக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மட்டுமே அனுப்பி உள்ளனர். போனில் எதுவும் பேசவில்லை என்பதால் போலீசாருக்கு குழப்பத்தை அடைந்துள்ளார்கள்.
மாணவி சுபபிரியா காதல் விவகாரத்தில் கடத்தப்பட்டு உள்ளாரா? அல்லது பணத்தை பறிக்கும் நோக்கில் மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்றுள்ளார்களா? அல்லது மாணவியே கடத்தல் நாடகம் நடத்துகிறாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றார்கள்.
ரூ.30 லட்சம் கேட்டு கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.