கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு.! விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி.!!
கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு.! விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி.!!
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் டெல்டா பாசனத்துக்கு நேற்று முன்தினம் (19.07.2018) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார். அப்போது, 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வெளியேற்றம் அன்று இரவு முதல் 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
நீர் வெளியேற்றும் அளவை கர்நாடகம் குறைத்து விட்டாலும், இன்னமும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. கபினி அணையில் இருந்து 35,625 ஆயிரம் கன அடியாகவும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது, நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114 அடியாகவும், மேட்டூருக்கு வரும் நீரின் அளவு 66 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் விரைவில் அணை, தன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் தற்போது 87 டிஎம்சி நீர் உள்ள நிலையில், பாசனத்துக்காக விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட நீர், நேற்று காலை 11 மணி அளவில் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் மலர் மற்றும் நெல்மணிகளை ஆற்றில் தூவி, வரவேற்றனர். காவிரி நீர் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையை அடைந்துள்ள நிலையில், அங்கிருந்து இன்று பாசனத்துக்காக நீர் திறக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிகப்படிருந்தது.
இந்நிலையில், சற்றுமுன் கல்லணையில் டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, இரா.காமராஜ், ஓ.எஸ்.மணியன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.
கல்லணையில் இருந்து காவிரிக்கு 7 ஆயிரம் கன அடியும், வெண்ணாறில் 7 ஆயிரம் கன அடியும், கல்லணை கால்வாய்க்கு ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள இந்த நீரை பயன்படுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடைபெறும். விவசாயிகள் சாகுபடி செய்ய தேவையான விதை, உரம் ஆகியவை தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.