தமிழக மக்கள் இப்போது, சற்று நிம்மதி அடைந்திருப்பதாக எல்லாத் தரப்பினரும் பேசிக் கொள்கிறார்கள்.
500 ரூபாயைக் கூட முழுத்தாளாகப் பார்த்தறியாத பாமரன் கூட, என்னங்க இது, ரெய்டிலே கிடைத்தது வெறும் ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் தானா?
ஒவ்வவொருத்தரு கிட்டேயுமே, பல்லாயிரக் கணக்கான கோடிகள் இருக்குமே என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இது வரை சோதனையிட்ட வருமானவரித்துறையினர், இனி அவர்கள் கைப்பற்றிய ஆவணங்களை வைத்து அலசி ஆராய்ந்து பார்த்தால் தான், இது அலிபாபா குகை என்பதை வெளி உலகிற்கு எடுத்துச் சொல்ல முடியும்.
அவர்கள் வாங்கிக் குவித்த சொத்துக்கள் எதுவும்,வெறும் புறம் போக்கு நிலங்கள் மட்டும் இல்லை.
தொழிலை மட்டுமே சார்ந்து, உழைப்பால் உயர்ந்து கொண்டிருப்பவர்களின் வருமானம் தந்து கொண்டிருக்கும் சொத்துக்கள்.
அடுத்தவர் வம்பு தும்புக்குப் போகாதவர்கள் அவர்கள். அதனால், எந்த அரசியல் பின்னணியையும் அவர்கள், தங்களுக்கு பின்னால் தேவைப்படுமே என்று யோசித்து, வைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள்.
அப்படிப்பட்டவர்களாகப் பார்த்துத் தான், இந்த மன்னார்குடி கும்பல் குறி வைத்திருக்கிறார்கள்.
இந்த மாதிரியான நிறுவனங்களில், தங்களது பினாமி பெயரில் முதலில் சிறிய அளவில் பங்குகளை வாங்கி, பின் 50 சதவீதத்திற்கும் அதிகமாக, வேறு பினாமி பெயரில் பங்குகளை வாங்கி, மறைமுகமாக அவர்களுக்கு, தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முதலில், அவர்களுக்கு பல இடைஞ்சல்களை ஏற்படுத்தி, அதனால், அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைச் சாதகமாக்கிக் கொண்டு, பின் மெல்ல, மெல்ல காய்களை நகர்த்தியிருக்கிறார்கள்.
பின் அவர்களிடம், பேரம் பேசுவது, படிந்தால், அப்போதுள்ள அந்த சொத்தின் மதிப்பிலிருந்தும், குறைவான மதிப்பில், அந்தச் சொத்தை தங்களது, நம்பிக்கைக்குப் பாத்திரமான பினாமிகளின் பெயருக்கு மாற்றி விடுவார்கள்.
இப்படித் தான் பல நூறு சொத்துக்கள் கை மாறியிருப்பதாகச் சொல்கிறார்கள். சென்னை நகரின் மத்தியில் உள்ள பிரபல சத்தியம் திரையரங்கக் குழுவினர், வேளச்சேரியில் ஃபீனிக்ஸ் மாலைக் கட்டிக் கொண்டிருக்கும் போதே, அது இவர்களின் கண்ணை உறுத்த, வழக்கம் போல் தங்கள் வலையை விரித்து, மிரட்டி வாங்கி விட்டார்கள்.
அதனுடைய இன்றைய மதிப்பு மட்டுமே, பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும். இது குறிப்பாகச் சொல்லப் படும் ஒரு சொத்தின் மதிப்பு மட்டுமே!
இது போல, ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொல்லி, நம்மை மூச்சையடையச் செய்கிறார்கள்.
அப்படியானால், தமிழ்நாட்டில் இந்த மாதிரியான எத்தனை சொத்துக்களைக் கைப்பற்றியிருப்பார்கள்? அதன் இன்றைய மதிப்பென்ன? என்று கணக்கு பார்ப்பதற்கே எத்தனை காலம் பிடிக்குமென்று தெரியவில்லை.
தாங்கள் விரும்பிய சொத்து கிடைக்கவில்லை என்றால், அந்த மாதிரியான சொத்தின் உரிமையாளர்களுக்கு, ரௌடிக் கும்பலை வைத்தும், காவல் உயர் அதிகாரிகளை வைத்தும் பொய் வழக்குகளைப் போட்டுப் பணிய வைத்திருக்கிறார்கள்.
இதற்காகவே, அவர்களுக்கு விசுவாசமான பல அதிகாரிகளையும் விலைக்கு வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
நினைத்த இரை கிடைக்கும் வரை ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் கொக்குகளாக இருந்திருக்கிறார்கள்.
இதெல்லாம், மக்களுடைய வரிப்பணத்திலிருந்து மறைமுகமாகப் பெறப் பட்டவை. ஆகவே, கைப்பற்றிய சொத்துக்களை, அந்த மக்களுக்கே சென்றடையுமாறு வழி செய்ய வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூட அறிக்கை விடுத்துள்ளார்.
கள்ளச்சாவி போட்டுத் திருடுபவனிடம் சாவிக் கொத்து கிடைத்தால் என்ன செய்வான்? என்ற மாதிரி தான் இருக்கிறது, நடக்கும் கூத்துகள் எல்லாம்….
முறைகேடாக வாங்கிக் குவத்த சொத்துக்கள், தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும், லட்சக் கணக்கான கோடி ரூபாய்களை பல சொத்துக்களில் முடக்கியிருக்கிறார்கள்.
இவர்களிடம் இன்னும் அதிகாரம் இருந்தால், இன்னும் சில ஆண்டுகளிலேயே, தமிழ்நாட்டை சசிகலா நாடு என்றும் கூட மாற்றி விடுவார்கள் என்று விசயமறிந்த அரசியல் பிரமுகர்கள் சொல்லும் போது, நாம சுதந்திர இந்தியாவில் தான் வசித்துக் கொண்டிருக்கிறோமா?
நாம் பெற்ற சுதந்திரத்தின் பெருமையை, இப்படி யாரோ ஒரு குடும்பம், தங்களது சுயலாபத்திற்காக நம் நாட்டை ஒட்டுமொத்தமாகச் சூறையாடியிருக்கிறார்களே, என்று எண்ணும் போது,
நமக்கு ஏன் இன்னும் இதைத் தட்டிக் கேட்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று சாதாரண டீக்கடையில் அப்பாவி மக்கள் பேசுவதைக் கேட்க வேதனையாக இருக்கிறது. அதற்கு விடை தான் தெரியவில்லை!