முதலை உள்ள ஆற்றில், தொடரும் ஈமச் சடங்குகள்..!
முதலை உள்ள ஆற்றில், தொடரும் ஈமச் சடங்குகள்..!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், வட மேற்குப் பகுதியில் உள்ளது சண்முகாநதி. இது புனித நதியாகக் கருதப் படுவதால், பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சண்முகநதிக் கரையில் உள்ள மண்டபங்களில் மொட்டை போட்டு விட்டு, பின் இந்த நதியில் குளிப்பார்கள்.
ஒரு வருடத்திற்கு முன்பாக, இந்த சண்முகநதியின் மேற்குக் கரையில், பெரிய முதலை ஒன்று, பாறையில் இளைப்பாறியதைக் கண்டதும், அனைவரும் அலறினர். அன்றிலிருந்து, இந்த ஆற்றில் குளிப்பதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்த தகவல் வனத்துறையினருக்கு உடனே தெரிவிக்கப் பட்டது. அவர்கள் வந்து தேடிப் பார்த்த போது, முதலை சிக்கவில்லை. அதனால், ஆற்றின் கரையோரம், “இந்த ஆற்றில் முதலை உள்ளது. அதனால், ஆற்றில் இறங்க வேண்டாம்” என்று எச்சரிக்கைப் பலகை வைக்கப் பட்டது.
இந்தப் பலகை, சண்முகநதி ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள ஆவுடையார் கோயில் குளத்தின் கரையிலும் வைக்கப் பட்டுள்ளது. மேலும், முதலை எச்சரிக்கை விடுத்த பின்னர், இந்தக் கோயிலில் இருந்த செல்லும் படிக்கட்டுகளுக்கு கேட் போட்டு மூடி விட்டனர்.
சிறிது காலம் கழித்து, ஆற்றில் சுத்தமாக நீர் வற்றி வறண்டு காணப்பட்டது. அதனால், பக்தர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், சில மாதங்களுக்கு முன்பாக பெய்த மழையின் காரணமாக, சண்முக நதியில் மீண்டும், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
அப்போது, மறுபடியும் முதலை தென்பட்டது. ஏற்கனவே, இருந்த முதலை இங்கு குட்டிகள் போட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில், ஒரு ஆண்டு கடந்தும், சண்முகநதி ஆற்றில் உள்ள முதலையை வனத்துறையினர் இன்னும் பிடிக்கவில்லை.
இந்த நிலையில், முதலை திரிந்து வரும் ஆற்றின் கரையோரம், இறந்தவர்களுக்குச் செய்யும் ஈமச் சடங்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஈமக்கடன் செலுத்துபவர்கள், இங்குள்ள ஆபத்தை அறியாமல், அதற்குரிய பூஜைப் பொருட்களை, ஆற்றில் இறங்கிப் போட்டு விட்டு வருகின்றனர்.
English Summary
In the river in the crocodile the continuing funeral rituals