வங்கிக்கு வந்த தொகை.. உடனே சென்ற குறுஞ்செய்தி - விவசாயி வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்.!
gaja-storm-relief-fund
புயல் நிவாரணத் தொகை மற்றும் 100 நாள் வேலைக்கு வந்த சம்பளத்தை வங்கி நிர்வாகம் கல்விக்கடனுக்கு பிடித்தம் செய்துள்ள கொடுமை புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நடைபெற்றுள்ளது.
கஜா புயலால் வீடுகள், மரங்கள் மற்றும் விவசாயம் முற்றிலும் சேதமடைந்தவர்களுக்கான நிவாரணத்தை தமிழக அரசு வங்கி கணக்கு மூலம் வழங்கி வருகிறது. பல வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வரும் நிவாரணத் தொகையை பழைய கடன்களுக்கு வரவு வைத்துக் கொள்வதாக எழுந்த புகாரையடுத்து புயல் நிவாரணத்தை வங்கிகள் கடனுக்கு வரவு வைக்கக் கூடாது என்று தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். இவரது மகள் ரம்யா. கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கடந்த 2009-ல் ரூ.2.92 லட்சம் கடன் பெற்று புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ரம்யா, பிஎஸ்சி நர்சிங் படித்தார்.
இந்நிலையில் புயலினால் விவசாயி ராஜேந்திரனின் தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் முழுவதுமாக சேதம் அடைந்துவிட்டன. இதற்காக தமிழக அரசு ரூ.34 ஆயிரம் நிவாரணத் தொகையை இவரது வங்கிக் கணக்கில் செலுத்தியது.
இதை தனது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியின் வாயிலாக அறிந்து தொகையை பெறுவதற்காக வங்கிக்கு சென்றபோது, அந்த தொகையை வங்கி நிர்வாகம் ஏற்கனவே மகள் படிப்பிற்காக வாங்கி இருந்த கல்விக் கடனுக்கு வரவு வைத்துக்கொண்டது தெரியவந்தது.
மேலும், ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி ராணி ஆகியோர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து கிடைக்கும் சம்பளத் தொகையையும் வங்கி நிர்வாகம் வரவு வைத்துக் கொண்டதும் தெரியவந்தது.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டுள்ள நிலையில், விவசாயியின் நிவாரணத் தொகையை வங்கி நிர்வாகமே வரவு வைத்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து நிவாரணத் தொகையை விடுவித்துத் தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் ராஜேந்திரன் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.