மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…! ஒரு நோயாளி மரணம்…!
Fire accident in Madurai Govt. hospital
மதுரையில் இருந்து தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத் தான் சிகிச்சைக்காக வருகின்றனர். தற்போது, இந்த மருத்துவமனை வளாகம் விரிவு படுத்தப்பட்டு நவீன மயமாக்கப் பட்டுள்ளது. புதிய கட்டிடங்களும் திறக்கப் பட்டுள்ளன.
ஆயிரக் கணக்கான மக்கள் மதுரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். கோரிப்பாளையத்திலிருந்து, அண்ணா பேருந்து நிலையம் வரை, வழி நெடுக இருப்பது, அரசு மருத்துவமனைக் கட்டிடங்கள் தான்.
இந்த அரசு மருத்துவமனையில் 115-வது வார்டு தீவிர சிகிச்சைப் பிரிவாகச் செயல்பட்டு வருகிறது. இந்த வார்டில் ஏர் கண்டிசன் வசதி செய்யப் பட்டுள்ளது. இங்கு 14 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
நள்ளிரவில், இங்குள்ள ஏ.சி. இயந்திரத்தில் இருந்து மின் கசிவின் காரணமாக திடீர் என்று தீப்பற்றிக் கொண்டது. தொடர்ந்து பரவிய தீயினால், அந்த தீவிர சிகிச்சைப்பிரிவு அறை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதைக் கண்டு, சிகிச்சைக்காக அந்த அறையில் இருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், கடும் பீதி அடைந்தனர்.
இதனால் அக்கம் பக்கத்து வார்டில் உள்ள நோயாளிகள் கலவரமானார்கள். அங்கும் இங்கும் ஓடினார்கள். தகவல் அறிந்து, மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்தவர்கள் அங்கு விரைந்தனர். உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர்.
இதனால், தீ பரவாமல் தடுக்கப் பட்டது. தீ அணைப்பு உபகரணங்களைக் கொண்டு, உடனடியாக அந்த அறையில் இருந்த நெருப்பை அணைத்தனர்.
இதற்கிடையே, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 14 நோயாளிகளும், அவசரமாக, அருகில் இருந்த 118-வது வார்டுக்கு மாற்றப் பட்டனர். அப்போது அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த தனிக்கொடி (வயது 48) என்பவர் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவின் காரணமாக அனுமதிக்கப் பட்டிருந்தார்.
அங்கும் இங்கும் நோயாளிகளை இடமாற்றம் செய்த தருணத்தில், அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
English Summary
Fire accident in Madurai Govt. hospital