சட்டம் போட்டும் பயனில்லை…! காவு வாங்கும் கந்து வட்டிக் கும்பல்…! கடும் நடவடிக்கை வேண்டும், என வலியுறுத்தும் மக்கள்…!
cruel people living base on "Kandhu Vatti"
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கன்னிமார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வனராஜ் (வயது 50) தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி (விஜயா). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
தன் மகளின் திருமணத்திற்காக, இவர்கள் இதே பகுதியைச் சேர்ந்த 6 பேரிடம் 3.60 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி உள்ளனர். அதற்கு, அசலுக்கு மேல் வட்டியும் கொடுத்துள்ளனர்.
தற்போது, அவர்களால், வட்டி கட்ட முடியாத நிலையில் இருந்துள்ளனர். ஆனாலும், இவர்களுக்கு கடன் கொடுத்த கந்து வட்டிக் கும்பல், இவர்களை அநாகரிகமாக தகாத வார்த்தை பேசி உள்ளனர். மேலும், இவர்களை, வீட்டை விட்டுத் துரத்தி விட்டு, அந்தக் கந்து வட்டிக் கும்பல், வீட்டினுள் சமையல் செய்துள்ளனர்.
இதனால், தங்கள் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தனர். ஆனால், அவர்களும் வெறுக்கவே, கணவன், மனைவி இருவரும் அரளி விதையை அரைத்துச் சாப்பிட்டு விட்டு, தங்கள் பிள்ளைகளுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொன்னார்கள்.
அதைக் கேள்விப்பட்ட, இவர்களது பிள்ளைகள், இவர்களை உடனடியாக, கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலன் இன்றி, விஜயா மரணம் அடைந்தார். இவரது கணவர் வனராஜ் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை.
விஷம் சாப்பிடுவதற்கு முன்பாக, தங்களை பணம் கேட்டு அவமானப் படுத்திய ஆறு பேர்களின் பெயர்களை, தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2 பேர் தலை மறைவாகி விட்டனர். தப்பி ஓடிய, அழகுராணி, சிங்கராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் கந்து வட்டிக் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கூடலுாரில், இந்தக் கந்து வட்டியை முழு நேரத் தொழிலாளக் கொண்டுள்ள பலரின் கொடுமையால், பலர் தங்கள் வீடு வாசலை இழந்து நடுத் தெருவிற்கு வந்துள்ளனர்.
இந்த மாதிரியான கந்து வட்டிக் கும்பலை, கடுமையான சட்டம் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும், என்று இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
English Summary
cruel people living base on "Kandhu Vatti"