தொடரும், கடத்தல்! சிக்கியது 1.20 கோடி மதிப்பிலான தங்கம்!!
தொடரும், கடத்தல்! சிக்கியது 1.20 கோடி மதிப்பிலான தங்கம்!!
வெளி நாடுகளில் இருந்து, மதுரைக்கு தங்கம் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. செல்போனில் பேட்டரி போலவும், மோடத்தின் உள்ளேயும், செல்போன் சார்ஜரிலும், என, ஏறக்குறைய தினசரி, மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தப் பட்டு வருவது, தொடர் கதையாகி உள்ளது.
இதனால், சுங்க வரித் துறையினருக்கு, தலைவலி ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை, கொழும்பிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில், தங்கம் கடத்தப் படுவதாக, புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், இந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை இடப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்த 3 பயணிகளிடம், 2 கிலோ, 400 கிராம் தங்கம் கிடைத்தது.
இந்த தங்கத்தை அவர்கள், பேனாக்களில், தகடுகளாக மறைத்துக் கொண்டு வந்துள்ளனர். மேலும், விமானத்தில், இவர்கள் உட்கார்ந்திருந்த சீட்டின் கீழே, சோதனையிட்ட போது, ஒன்றரை கிலோ எடை உள்ள தங்கம் கட்டிகளாக கிடைத்தது.
கடத்தி வரப்பட்ட மொத்த தங்கத்தின் எடை 3.900 கிலோ. ஒரே விமானத்தில், இவ்வளவு தங்கம் கடத்தி வரப்பட்டு கண்டு பிடிக்கப் பட்டது, இதுவே முதல் முறை.
அந்த 3 பயணிகளும், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடத்தி வந்த 1.20 கோடி ருபாய் மதிப்பிலான தங்கத்தை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றினர்.
அந்த 3 பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
continue trafficking gold worth rs 1 crore