கோவை மாணவி உயிரிழப்பு குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!
கல்லூரி மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று கோவையில் என்.எஸ்.எஸ். பயிற்சியின் போது மாணவி ஒருவர், 3-வது மாடியிலிருந்து 2-வது மாடியின் சன்ஷேடில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில், பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் வியாழனன்று என்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியாளர் ஆறுமுகம், கல்லூரியின் 3-வது மாடி விளிம்பில் நின்று கொண்டு, கீழே குதிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். சில மாணவிகள் கயிற்றைக் கட்டிக் கொண்டு, கீழே மாணவர்கள் பிடித்திருந்த வலையில் குதித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவியான லோகேஸ்வரி குதிக்க முன்வந்தார். லோகேஸ்வரி இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு தயாராகும் முன்பே, பயிற்சியாளர் ஆறுமுகம் கவனக்குறைவாக தள்ளிவிட்டார். ஆனால் குதிக்க தயாராகாத லோகேஸ்வரி, 3-ஆம் மாடியிலிருந்து 2-ஆம் மாடியின் சன்ஷேடில் விழுந்து கீழே விழுந்தார்.
விழுந்த வேகத்தில் முகத்திலும் கழுத்தில் பலத்த காயமுற்ற லோகேஸ்வரி, முதலில் தொண்டாமுத்தூரில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ஆலாந்துறை போலீசார் பயிற்சியாளர் ஆறுமுகத்தைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். லோகேஸ்வரியின் உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சக மாணவர்களும், லோகேஸ்வரியின் உறவினர்களும் திரண்டுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியதாவது,
கல்லூரி மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிய பாதுகாப்புடன் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
English Summary
coimbatore girl student dies during disaster Now Inquire