பாத யாத்திரையாக பழனிக்கு வந்தார் சின்னதம்பி…! தொடர்ந்து காட்டும் கண்ணா மூச்சி ஆட்டம்…! சின்னதம்பியை காண குவியும் ரசிகர்கள் கூட்டம்….!
chinnathambi enter into palani
கும்கி யானை உதவியுடன், டாப்சிலிப்பில் விடப்பட்ட சின்னதம்பி யானை, மறு நாளே, மீண்டும் வந்து விட்டது. உடுமலை பேட்டையில் உள்ள தோட்ட பகுதியில் உள்ள கரும்புக் காட்டை துவம்சம் செய்து, சாப்பிட்டு, சொகுசாக இருந்தது.
அது ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருந்த குட்டை நீரை வனத்துறையினர், வெளியேற்றினர். இதனால் கோபம் அடைந்த சின்னதம்பி, அருகில் இருந்த சர்க்கரை ஆலையின் வாசல் கதவை உடைத்து விட்டுச் சென்றது.
தொடர்ந்து, சின்னதம்பியை, வனத்துறையினர் விரட்டி வந்தனர். அவர்களுக்கு போக்கு காட்டிய சின்னதம்பி, அருகில் உள்ள கரும்பு காடுகளில் தஞ்சம் புகுந்தது. பின், அங்கிருந்தும், வனத் துறையினர் சின்னதம்பியைத் துரத்தினர்.
இதனால், உடுமலைபேட்டை பகுதியிலிருந்து நகர்ந்து, தற்போது பழனி பகுதிக்கு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட மேற்கு எல்லையான சுவாமிநாதபுரத்தில் தற்போது சுற்றிக் கொண்டிருக்கிறது.
அருகே உள்ள மடத்துக்குளம் பாலத்தைக் கடந்து, பழனி பகுதிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. அங்குள்ள அமராவதி ஆற்றுத் தண்ணீரில், ஹாயாக குளியல் போட்டு, அந்தப் பகுதியைச் சுற்றி சுற்றி வருகிறது.
சின்னதம்பியை அதன் போக்கிலே விட்டு பிடிக்க எண்ணிய வனத் துறையினர், அதனைப் பின் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கின்றனர். தற்போது பழனி பகுதிக்கு வந்துள்ளதால், பழனி வனத் துறையினர், சின்னதம்பியை வனத்திற்குள் விட தீர்மானித்து, அதனைக் கட்டுக்குள் வர தீர்மானித்துள்ளனர்.
இந்தப் பகுதியிலிருந்து சற்றுத் தள்ளித் தான் தென்மேற்கு தொடர்ச்சி மலை இருக்கிறது. அந்தப் பகுதியில் தான், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். அந்த வனத்தில் சின்னதம்பியை விட ஏற்பாடு செய்யபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, டி.வி-யில் பார்த்து, சின்னதம்பியின் ரசிகர்களாகி விட்ட ஒரு கூட்டம், சின்னதம்பியை நேரில் பார்த்து படம் எடுக்க அந்தப் பகுதியில் அலை மோதி வருகிறது!
English Summary
chinnathambi enter into palani