சுடுகாட்டை இடித்து, பிளாட் போட்டு விற்க முயற்சி….! “அய்யா மயானத்தைக் கண்டு பிடிச்சுக் கொடுங்க”…! – பரிதவிக்கும் மக்கள்…!
cemetary destroyed by the private party
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டியில் இரண்டு வார்டுகளுக்கு உட்பட்டது ஏ.பி. காலனியும், பெரியா்செட்டிபட்டி என்ற ஊரும். இந்த ஊர்களில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக, அருகில் உள்ள செல்லப்பகவுண்டனுார் செல்லும் பாதையில் உள்ள, சுமார் 2 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் இறந்தவர்களைப் புதைத்து வந்தனர்.
தற்போது இந்த மயானத்தைச் சுற்றி, புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அந்தப் பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் விலை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இந்த மயானத்திற்கு அருகே தனியார் நிலம் வைத்திருந்த ஒரு நபர், தன் நிலத்துடன் அருகில் இருந்த சுடுகாட்டு இடத்தையும், ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு சமன் படுத்தி விட்டார்.
இதைக் கண்டு, அந்த சுடுகாட்டு நிலத்தைக் காணாமல் மக்கள் பரிதவித்துப் போயினர். இது குறித்து, அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், இந்த நிலத்துடன் சுடுகாட்டு நிலத்தையும் சேர்த்து வேலி போட, தனியார் ஒருவர், வருவாய்த்துறை அதிகாரி உதவியுடன், முயற்சி செய்தார். இது குறித்து, கடந்த 2003-ஆம் ஆண்டில், மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தோம்.
அதன் பேரில், பழனி தனி வட்டாட்சியர் விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக ஒரு கடிதம் கொடுத்து விட்டுச் சென்றார். ஆனால், இது வரை, அந்த 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கவேயில்லை.
தற்போது, இருந்த சுடுகாட்டையும் இடித்து தரை மட்டமாக்கி, பிளாட் போட்டு விற்க முயற்சித்து வருகின்றனர். எனவே, எங்களுக்குண்டான சுடுகாட்டு நிலத்தை மீட்டுத் தர வேண்டும், என்று அவர்கள் புகார் அளித்துள்ளனர்.
English Summary
cemetary destroyed by the private party