சென்னை கந்தன்சாவடியில் கட்டிடசாரம் இடிந்து விழுந்தது: பலத்த காயங்களுடன் 17 பேர் மீட்பு
சென்னை கந்தன்சாவடியில் கட்டிடசாரம் இடிந்து விழுந்தது: பலத்த காயங்களுடன் 17 பேர் மீட்பு
சென்னையில் தரமணி அருகே கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டுமானத்துக்காக அமைக்கப்பட்ட சாரம் இன்று இரவு திடீரென இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கந்தன் சாவடியில் தனியார் மருத்துவனைக்காக 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடத்தின் சாரம் மற்றும் தூண் திடீரென சனிக்கிழமை இரவு இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த தகவல் அறிந்து தீயனைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 30-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், அதில் 17 பேர் மீட்கப்பட்டனர். 10 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அதில், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தற்போது மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 4 தீயணைப்பு வாகனங்கள், 2 மண் அள்ளும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து காஞ்சிபரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறுகையில், இந்த கட்டுமானத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கட்டிட சாரரம் இடிந்து விழுந்தபின், இதுவரை 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் குறைந்த அளவு சிமெண்ட் போட்டு கான்கிரீட் அமைத்ததால் இடிந்துள்ளது எனத் தெரிவித்தார்.
English Summary
17 injured as scaffolding of under-construction building collapses in Chennai