சாட்சி சொல்ல காஞ்சிபுரம் வந்த ஆஞ்சிநேயர்! சுவாரசியம் குறையாமல் பார்க்கலாம் வாங்க!
சாட்சி சொல்ல காஞ்சிபுரம் வந்த ஆஞ்சிநேயர்! சுவாரசியம் குறையாமல் பார்க்கலாம் வாங்க!
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் சமயத்தில், சாட்சிகள் தான், முக்கியமாக கருதப்படுவார்கள். ஆனால், ஒரு கோயில் வழக்கில், அங்குள்ள ஆஞ்சநேயரே நீதி மன்றத்தில் வந்து சாட்சி செல்லி இருக்கிறார். கேட்பதற்கு நம்ப முடியவில்லை என்றாலும் உண்மை அது தான்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்குளத்தில் பழமையான சஞ்சீவராயர் ஆலயம் உள்ளது. இங்கு மூலவராக ஆஞ்சநேயர் இருக்கிறார். இங்கிருந்த உற்சவரான பஞ்சலோகத்தால் ஆன, ஆஞ்சநேயர் சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கோயிலில் இருந்து திருடு போனது.
அதனால், அதனைக் கண்டு பிடிக்கச் சொல்லி கோயில் சார்பாக புகார் அளித்தனர். போலீசாரும் அந்த சிலையைத் தேடிக் கொண்டிருந்தனர். சில தினங்கள் கழித்து, இந்த ஊருக்கு 7 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு குளத்தில், ஒரு கோணிப்பைக்குள் உற்சவரான ஆஞ்சநேயர் சிலை கிடந்துள்ளது.
அதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதனை நீதி மன்றத்தில் ஒப்படைத்தனர். இதைக் கேள்விப்பட்டு, சஞ்சீவராயர் கோயிலைச் சேர்ந்தவர்கள், நீதி மன்றத்திற்கு வந்து, “அது தங்கள் கோயில் சிலை” என்று சொன்னார்கள். நீதிபதி அதற்கான அடையாளத்தைச் சொல்லும்படி கேட்டிருக்கிறார். அவர்களும் அடையாளத்தைச் சொல்லி இருக்கிறார்கள்.
அந்த அடையாளத்தைச் சரிபார்க்க, உற்சவரான ஆஞ்சநேயர் சிலை, நீதி மன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு, அனைவரின் முன்னிலையிலும், அடையாளங்கள் சரிபார்க்கப் பட்டது. அவர்கள் சொன்ன அடையாளம் ஒரே மாதிரி இருந்ததால், அந்த சிலை மீண்டும், கோயிலுக்கு வழங்கப் பட்டது.
இவ்வளவு சக்தி வாய்ந்த இந்த சஞ்சீவராயர் கோயிலின் கருவரையைச் சுற்றி வரும் போது, பின் பகுதியில், குனிந்து தான் வர வேண்டும். அதற்கேற்றாற் போல பாதையை அடைத்து, கீழே மட்டும் வழி விட்டிருக்கிறார்கள். கோயிலின் முன்பாக உள்ள குளம், எந்தக் காலத்திலும் வற்றாது. இந்தக் கோடை காலத்திலும் அவ்வளவு ரம்யமாக இருக்கிறது.
இந்தக் கோயில் குளத்தின் வடக்கு கரையில், அந்தக் காலத்திலேயே சாப்பிடுவதற்கு கல்லால் ஆன தட்டுக்களை கரையில் அமைத்திருப்பதைப் பார்க்கும் போது, மிக ஆச்சர்யமாக இருக்கிறது.
இன்னொரு ஆச்சர்யம்...அந்தக் குளத்தின் கரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கற்களில் வைணவக் கடவுளின் சிற்பங்களை அவ்வளவு தத்ரூபமாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்தக் கோயிலையும் குளத்தையும் சுற்றிப் பார்க்க குறைந்தது 3 மணி நேரமாவது ஆகும். இந்த காஞ்சிரங்குளம், காஞ்சிபுரத்திலிருந்த 15 கி.மீ. தொலைவில் உள்ளது
English Summary
anjineya vitness of the case in kanchipuram