இந்த தொகுதி எங்களோட எஃகு கோட்டை.. எதிரில் நின்னா டெபாசிட் கூட வாங்க முடியாது - அனல் கிளப்பிய அமைச்சரின் பேச்சு..!
admk minsiter rb uthaykumar thirubarangunram
நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்வோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் மே 19ம்தேதி நடைபெறும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு கழக வேட்பாளராக எஸ்.முனியாண்டியை அறிவித்துள்ளனர்.
கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சீனிவேல் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதனை தொடர்ந்து அவரது மறைவிற்கு பின் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் 43,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
நிச்சயம் இந்த இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகம் மாபெரும் வெற்றி பெறும்.
இந்த திருப்பரங்குன்றம் தொகுதியில் அனைத்து குக்கிராமங்களிலும் சாலை வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனை இப்பகுதியில் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தோம்.
அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இன்றைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்கி தந்துள்ளார்கள்.
அது மட்டுமல்லாது, இந்த திருப்பரங்குன்றம் தொகுதியில் துணைக்கோள் நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி அடுக்கடுக்கான வளர்ச்சி திட்டங்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில் நாங்கள் உருவாக்கி கொடுத்துள்ளோம்.
இந்த இடைத்தேர்தலில் மக்களுக்காக நாங்கள் செய்த திட்டங்களை முன் நிறுத்தி ஒவ்வொரு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்வோம். ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சிகள் இதுபோன்று சாதனைகளை கூறி வாக்குகள் கேட்க முடியாது.
ஆனால் வேண்டுமென்று பல்வேறு பொய்யான பிரச்சாரங்களை செய்வார்கள். அது ஒரு போதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஏனென்றால் அதிமுக அரசு தொடர்ந்து திட்டங்களை வழங்கி மக்கள் நலன் காக்கும் அரசாக உள்ளது என்று மக்களே கூறி வருகின்றனர். மக்களும் மிகப்பெரிய வெற்றியை கழகத்திற்கு வெற்றி பரிசாக தர தயாராக உள்ளனர்.
ஏற்கனவே 18 சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. தற்போது மே 19ம் தேதி மேலும் நான்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஆக மொத்தம் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை பெற்ற தொகுதி திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி என்ற வரலாற்றை உருவாக்குகின்ற வகையில் கழகத் தொண்டர்கள் முழு வேகத்துடன் களப்பணியாற்றுவதற்கு தயாராக உள்ளனர்.
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளை எல்லாம் டெபாசிட் இழக்கச் செய்து என்றைக்கும் திருப்பரங்குன்றம் அதிமுகவின் எஃகு கோட்டை என்ற வரலாற்றை நாங்கள் உருவாக்குவோம்' என்று கூறியுள்ளார்.
English Summary
admk minsiter rb uthaykumar thirubarangunram