விரட்டியது சின்னதம்பி…! ஓடி ஒளிந்து கொண்டார் தமிழக அமைச்சர்….!
A minister ran away when seen the Chinna Thambi
கோவை சின்ன தடாகத்தில் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை, டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது. ஆனால், மறுநாளே அங்கிருந்து வெளியேறிய யானை ஊருக்குள் வரத் துவங்கியது.
தற்போது,உடுமலை கிருஷ்ணாபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலையின் பின் புறத்தில் முகாம் இட்டுள்ளது. அருகில் உள்ள குட்டையில் உடல் சூட்டைத் தணிக்க அதிலே படுத்துப் புரள்கிறது. பின், அருகில் உள்ள கரும்புத் தோட்டத்திலே புகுந்து, கரும்புகளைத் தின்றும் அமைதியாக இருந்தது.
அதை விரட்ட வந்த கும்கி யானை கலீமுடன் நட்பாகப் பழகி சாதுவாக இருந்தது. இந்த சி்ன்னதம்பிக்கு இப்போது ரசிகர் மன்றம் வைக்கும் அளவிற்கு, புகழ் பெற்றுள்ளது சின்னதம்பி.
இப்போது இந்த யானையை காட்டுக்குள் விரட்ட, வனத்துறையினர், கடினப் பிரயாசை மேற் கொண்டுள்ளனர். யானை படுத்துக் கொண்டிருந்த சர்க்கரை ஆலையின் கழிவு நீர் குட்டையில் இருந்த நீரை முழுவதுமாக வனத் துறையினர் வெளியேற்றினர்.
இதைக் கண்டு, சின்னதம்பி ஆவேசம் அடைந்தது. அது வரை சாதுவாக, சாப்பிட்டுக் கொண்டும், குட்டையில் துாங்கிக் கொண்டும் ஜாலியாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த சின்னதம்பி, குட்டை நீர் காலியானதும், கோபம் கொண்டு, 1 கி.மீ. துாரம் வெளியேறி, தோட்டங்களுக்குள் புகுந்து நெல், கரும்பு பயிர்களைத் துவம்சம் செய்தது. அதனால், வனத்துறையினர் சின்னதம்பியை விரட்டினர்.
அவர்களிடமிருந்து தப்பித்து வந்த யானை, சர்க்கரை ஆலையில் காவலாளி தங்கி இருக்கும் அறைக்கு வந்து, அதன் கதவை உடைத்து விட்டு, தன் கோபத்தை வெளிப்படுத்தி விட்டுச் சென்று விட்டது.
இது வரை அமைதியாக இருந்த சின்னதம்பி தற்போது, அதன் சௌகர்யங்கள் குறையும் போது, ஆக்ரோசமாக மாறியதைக் கண்டு, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, சர்க்கரை ஆலை விதைப் பண்ணைப் பகுதிக்குச் சென்ற, கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, கரும்புக் காட்டுக்குள் இருந்த சின்னதம்பி, ஆவேசம் வந்து, அமைச்சர் இருந்த பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்டதும், அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும், ஓடிச் சென்று, காவலாளியின் அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டனர்.
பின் யானை அந்த இடத்தை விட்டுச் சென்றதும் தான், அறையை விட்டு வெளியே வந்தனர்.
English Summary
A minister ran away when seen the Chinna Thambi