வரவேற்போம்... தமிழ் புத்தாண்டை.! எப்படி வரவேற்க வேண்டும்?! - Seithipunal
Seithipunal


உலகத் தமிழர்களால் ஏப்ரல் 14ஆம் தேதி புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் ஆண்டின் முதல் நாளாக கருதப்படும் இந்நாளை, அரசு விடுமுறை அளித்து கொண்டாடுகிறது.

சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோவில்களுக்கு சென்றும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் தமிழ் வருடப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

ஒவ்வொரு தமிழ் புத்தாண்டும் ஒரு புதிய பெயரில் பிறக்கும். கடந்தாண்டு விளம்பி பிறந்தது.

இந்தாண்டு விகாரி வருடம் பிறக்கிறது.

சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். சித்திரை, தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப் பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

புதிய எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.

எப்படி வரவேற்க வேண்டும்?

தமிழ் புத்தாண்டிற்கு முந்தைய நாள் வீடு, வாசலை சுத்தம் செய்து மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.

தமிழ் புத்தாண்டு நாளன்று அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, கோவிலுக்குச் சென்று வழிபாட்டை மேற்கொள்வர்.

தமிழ் புத்தாண்டு நாளன்று வீட்டு வாசலில் புதுக்கோலம் இடுவர். அரிசி மாவில் கோலமிட்டு, வண்ணப் பொடிகளில் அலங்காரமிடுவர்.

தமிழ் புத்தாண்டு வழிபாட்டின்போது, ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை வைப்பர்.

மேலும் தங்க, வெள்ளி நகைகள், சில்லரைக் காசுகளை வைத்தும், வெற்றிலை பாக்கு, பூக்கள் ஆகியவற்றை கடவுள் சிலைகளுக்கு முன்பு வைத்தும் வழிபாடு செய்வர்.

உணவு :

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.

மதிய உணவில் வேப்பம்பூபச்சடி, மாங்காய்ப்பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம்.

மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் அம்சமாக இச்செயல்பாடு கருதப்படுகிறது.

மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்கு சென்று, பலகாரங்களை பகிர்ந்துண்பது நிகழும்.

வாழ்க்கை என்றாலே கசப்பும், இனிப்பும் கலந்ததுதான். இப்புத்தாண்டிலும் கசப்பும், இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.

இந்நாளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

பகிர்ந்து உண்ணல், பரிசு வழங்குதல், உறவுகளுடன் மகிழ்ந்திருத்தல் ஆகியவை தமிழ் புத்தாண்டின் சிறப்புகளாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2019 tamil new year


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->