புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிராமங்களில் 144 தடை!! வாட்ஸ் அப்பில் அதனை செய்தால் கடும் தண்டனை!!
144 in pudukkottai
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வாட்ஸ் அப்பில் தங்கள் சமூகம் குறித்து மாற்று சமூகத்தை சேர்ந்த இருவர் இழிவாக பேசியதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் மீதும், அவர்களின் வாகனம் மீதும், தனியார் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி அப்பகுதியையே வன்முறை களமாக்கினார்.
உள்ளூர் காவல் நிலையம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் கூடினர். மேலும் கடை வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அவர்களில் சிலர் அடித்து நொறுக்கியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.
இதனையடுத்து நேற்று காலை தங்கள் சமூகம் குறித்து வாட்ஸ் அப்பில் இழிவாக பேசிய வர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொன்னமராவதி, குழிபிறை, பனையப்பட்டி, பனையப்பட்டி, நல்லூர், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்குநடந்த சம்பவத்தை அடுத்து, பொன்னமராவதியை சுற்றியுள்ள பகுதிகளில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பொன்னமராவதி சம்பவம் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,சமூக வலைத்தளங்களில் வீண் வதந்திகளை பரப்பினால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.