ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்!
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள பூலாம்பாடி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், விழுப்புரம், மதுரை மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500 காளைகள் பங்கேற்றன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள்(காளையர்கள்) கலந்து கொண்டு காளைகளை பிடித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், கால்நடை பராமறிப்புத்துறை, பொது மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற காளைகள் மற்றும் அதனை பிடிக்க வந்திருந்திருந்த வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தபட்டு பின்னர் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர் .
இதில் வெற்றி பெற்ற மாடு பிடி வீரர்களுக்கும், காளையர்களுக்கு ஆட்டம் காட்டிவிட்டு வென்று சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு விலை உயர்ந்த பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் போது மாடு முட்டியதில், சேலம் மாவட்டம் செந்தாலைப்பட்டியை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் பாலமுருகன்(21) என்ற வாலிபர் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மேலும்10க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மேற்கொண்டிருந்தனர்.
English Summary
one man death in jallikattu function