பூரி ஜெகன்னாதர் கோவிலில் உள்ள மர்மங்கள் மற்றும் அதிசயம்..!
puri jekannathar temple
ஒவ்வொரு கோவிலுக்கென்றும் ஏதாவதொரு தனிச்சிறப்பு, அதிசயம் மற்றும் மர்மங்கள் அடங்கி இருக்கிறது. அந்தவகையில் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரைப் பகுதியில் அமைந்த வைணவத் தலமான பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. அந்த சிறப்புகளை பற்றி இங்கு காண்போம்.
கருவறை விக்ரக மர்மம் :
உலகிலேயே மூலவரின் சிலை மரத்தாலான ஒரே கோவில் இதுதான். இந்த ஆலயத்தில் ஜெகன்னாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரை தேவி (கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்திரை) ஆகிய மூவரும் ஒரே கருவறையில் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவரின் சிலை உரிய சடங்குகளுடன் அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
முழுமையடையா கடவுள் சிலைகள் :
இதன் மூலவர் சிலைகள் முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் முழுமையடையாமல் இருக்கின்றன.
எதிராக பறக்கும் கொடி :
இந்த கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம், நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போலவே காட்சி அளிக்கும்.
அதே போல் அந்த சக்கரத்தின் மேலே ஒரு கொடி பறந்து கொண்டு இருக்கும். இது சாதாரணக்கொடி அல்ல, ஏனென்றால் இந்த கொடியானது காற்று எந்த பக்கம் வீசுகிறதோ, அதற்கு எதிர் திசையில் பறக்கும்.
நேரெதிராக நடக்கும் நிகழ்வு :
பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேரெதிராக நடக்கும்.
கோபுரத்தின் நிழல் :
இந்த கோவில் கோபுரத்தின் நிழல் ஒருபோதும் கீழே விழுவதில்லை. சூரியன் சுட்டெரித்தாலும் கோபுரத்தின் நிழலை பார்க்கமுடியாது. இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை.
சமைக்கும் உணவில் அதிசயம் :
இந்த கோவிலில் சமைக்கப்படும் பிரசாதத்தின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால், பக்தர்கள் எண்ணிக்கை கூடினாலும், குறைந்தாலும் தயாராகும் பிரசாதம் ஒருபோதும் பக்தர்களுக்கு பற்றாமல் போனதில்லை அது போல மீதமும் ஆவதில்லை.
மடப்பள்ளியில் இன்று வரை விறகு அடுப்பு வைத்து, மண் பானைகளை கொண்டு தான் சமைக்கிறார்கள். இந்த மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து கீழே தீ மூட்டுகிறார்கள். அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும் அதிசயம் நடக்கிறது.
அதிசய ஆலயம் :
கடற்கரையை ஒட்டி ஜெகன்னாதர் இருந்தாலும், சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உட்புறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது.
ஆனால், அதே சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் சப்தம் நமக்கு கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.