பங்குனி மாதம் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்..!
pankuni month rasipalan
ஒருவர் பிறந்த ராசி, நட்சத்திரம், கிழமை, தேதி என்று எத்தனையோ வகையில் நாம் பலன்களை தெரிந்துகொள்கிறோம். அந்த வகையில் குறிப்பிட்ட தமிழ் மாதத்தில் பிறக்கும்போது என்ன பலன்கள் பொதுவாக அமையும் என்பதை நாம் அறியலாம்.
பங்குனி மாதப்பிறப்பு என்பது சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கும் காலமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசப்படுத்தக்கூடிய அளவிற்கு ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். ஆனால், இவர்களின் முகபாவங்களை வைத்து எதையும் தெரிந்து கொள்ள முடியாது.
பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதே நேரத்தில் சீக்கிரமாக மனத்தளர்ச்சி அடைந்து விடுவார்கள். பேச்சில் கனிவும், கண்டிப்பும் இருக்கும். பெருந்தன்மையும், பரந்த நோக்கமும் இருக்கும். இடம், பொருள், ஏவல் அறிந்து பணிபுரிவதில் வல்லவர்கள்.
இவர்கள் திரைப்படத் தொழிலுக்கு ஏற்றவர்கள். சிற்பக்கலையிலும் ஆர்வம் உண்டு. இயற்கைக் காட்சிகளை ரசிப்பார்கள். கலையை தெய்வமாக கருதி வழிபடுவார்கள். இவர்களுக்கு முன்கோபம் அதிகமாக வரும்.
இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் படபடப்புடன் பேசுவார்கள். நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டு. இந்த பெண்களில் சிலர் இளம்வயதில் வறுமையில் வாடும் வாய்ப்பு உண்டு. இவர்களில் பலருக்கு பெண்குழந்தைகளே பிறக்கும். எழுத்து தொழிலுக்கு இவர்கள் ஏற்றவர்கள்.
எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். சுற்றிவளைத்துப் பேசும் குணமுடையவர்கள். எதிலும் முன்ஜாக்கிரதையாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களை பாராட்டி பேசினால் அதில் மயங்கி விடுவார்கள். ஆன்மிகத் துறையில் ஈடுபட்டால் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பசிதாங்கும் சக்தி இவர்களுக்கு அதிகம் உண்டு.
வெகு சீக்கிரத்தில் மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவார்கள். அதேபோல் வெகு சீக்கிரத்தில் பிறர் மீது தமக்குள்ள அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வார்கள்.
மன எழுச்சியை உண்டாக்கும் கதைகளை வாசிப்பதிலும், கிளர்ச்சியூட்டும் ஓவியங்களை கண்டுகளிப்பதிலும் பொழுதைப் போக்குவர். தெளிவுடன் விளங்கும்போது இவர் ஆழ்ந்த கருத்துடையவராகவும், மிகவும் பொறுமைசாலிகளாகவும், தன்னடக்கமுடையவர்களாகவும், திறமைசாலிகளாகவும் விளங்குவர்.