கோவிலில் மூலவர் சன்னதியை மறைக்கக் கூடாது.. ஏன் தெரியுமா.?
How to pray in temple
கர்ப்பகிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று சாமி கும்பிடக் கூடாது. கூட்டம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் வழியை விட்டு வணங்குங்கள் என்றும் சன்னதியை மறைக்காதீர்கள் என்று அர்ச்சகர்கள் குரல் கொடுத்தபடி இருப்பார்.
நாம் கடவுளை மனதார வேண்டிக் கொண்டிருக்கும்போது இடையில் இவர்கள் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று நமக்கு அதற்கான அர்த்தம் அப்பொழுது புரிவதில்லை.
கோவில்களில் ஆகம விதிகள் தவறாமல் பின்பற்றப்படுகிறது. அதன்படி ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் கொலு வீற்றிருக்கும் மூலவருக்கும், எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்க கூடாது என்று சொல்லப்படுகிறது.
அதற்குக் காரணம் ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கில் இருந்து விடும் மூச்சு காற்றினால் தான், கர்ப்ப கிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் மூலவரின் வயிற்றுப் பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இடை மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோயில்களில் நந்தி சிலை அமைக்கப்படுகிறது.
ஆனால் நாம் கடவுளை கும்பிடும் ஆர்வத்தில் சன்னதியை மறைத்து கொண்டு நிற்கும்போது இம்மூச்சு காற்று தடைபடும் என்பதால் தான் குறுக்கே நின்று தரிசனம் செய்யக்கூடாது என்று கூறுகின்றனர். கோயில்களில் ஆகம விதிகளை தெரிந்து கொண்டே அதனைப் பின்பற்றி நாம் கடவுளை வழிபட்டால் வேண்டிய அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.