அறிந்து கொள்வோம்; வடலூர் தைப்பூச திருவிழாவின், சிறப்பும், வரலாறும்!!
history of vadalur thaipoosam
கடலூர் மாவட்டம் வடலூர், சத்திய ஞான சபையில் முதன்முதலாக 1872 சனவரி 25 (தை 13) வியாழக்கிழமை தைப்பூசத்தன்றுஅருட்பெருஞ்ஜோதி தரிசனம் தொடங்கியது. தை மாதத்தில் பௌர்ணமி முழுநிலவும் பூச நட்சத்திரமும் ஒன்று சேரும் நாள்தான் தைப்பூச விழாவாகும். ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஏழுதிரைகள் திறந்து தீப ஜோதி தரிசனம் காட்டப்பட்டு இந்த விழா கொண்டாடப்படுகிறது.
சிதம்பரம் அருகிலுள்ள மருதூர் கிராமத்தில் 1823 வருடம், ஆக்டொபர் 5ல் பிறந்த திருவருட்பிரகாச வள்ளலார் , 23/05/1867ல் வடலூர் மக்கள் தானமாக கொடுத்த 80 காணி நிலத்தில் தருமச்சாலையை தொடங்கினார். அன்று முதன்முதலில் பசியை போக்க ஏற்றப்பட்ட அடுப்பு இன்றுவரை அணையாது, மூன்று வேளையும் உணவை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
ஆன்மஜோதியை உணர முடியாமல் தடுக்கும், இருபத்திநான்கு தத்துவப்பொருட்களை குறிக்கும்பொருட்டு சத்திய ஞான சபையின் உட்புறத்தில் எட்டு வாயிலும், பதினாறு ஜன்னல்களும் அமைக்கப்பட்டுள்ளது. உயிரணுபவமாய் அருளை உணரும் போது தான் இறைவனை காணலாம் என இந்த வாயில்களும், ஜன்னல்களும் திறக்கப்படும் பொழுது நாம் உணரலாம்.
இது நமது தேகத்தை அடிப்படையாக கொண்ட தத்துவத்தை வெளிப்படுத்த கூடியது. முதல் பிரகாரத்தில் எண்கோண இருப்பு கம்பிச்சுற்றாலையும், அடுத்து எண்கோண கைப்பிடிச் சுவரும், அடுத்து ஞான சபைத் தாய்ச் சுவரும் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று எட்டடி இடைவெளியில் அமைந்துள்ளது.
இறைவன் இருக்கும் நிலையை உலகுக்கு எடுத்து காட்டவே சத்திய ஞான சபையின் மையத்தில் ஞானசபை ஒன்றை அமைத்துள்ளார். ஞானசபை என்பது தலையின் உச்சிப் பகுதியைக் குறிக்கும். தெற்கு நோக்கிய சபையின் முன்புறத்தில் மூன்று திறந்த வாயில்கள் உள்ளன. இருபுற சிறுவாயில்கள் நமது இரு கண்களையும் மத்தியில் உள்ள பெருவாயில் நமது புருவமத்தியுமாகும்.
அதனுள் முன்புற மண்டபத்தில் மேற்புறத்தில் சிற்சபையும், கீழ்ப்புறத்தில் பொற்சபையும் எதிரெதிரே அமைக்கப்பட்டுள்ளது. எண்கோணவடிவிலான சத்திய ஞான சபைக் கட்டிடத்தை பெருமானார் அவர்களே வடிவமைத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
history of vadalur thaipoosam