அடடா..! இதுவல்லவோ திமுகவின் வளர்ச்சி! ஆச்சர்யத்தில் மெய்சிலிர்க்கும் தொண்டர்கள்!
rising son of dmk
நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என பரிணாம வளர்ச்சி கண்ட இயக்கம் தற்போது இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம், 1949 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட பொழுது அதனை உருவாக்கிய அறிஞர் அண்ணா அகில இந்திய அளவில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த காங்கிரசுக்கு எதிராக அப்போதைய ஒருங்கிணைந்த தமிழகத்தில் பல இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி உருவான இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்.
அப்படி அண்ணாவால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தின் வளர்ச்சியில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் பங்கு மிக முக்கியமானது. அவருடைய திரைப்பட வசனங்கள், பாடல்கள் மக்களை பெரிதும் கவர்ந்தன. அதனை வைத்து ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக்கழகம் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியின் கைகளில் எம்ஜிஆரின் உதவியுடன் வந்து சேர்ந்தது.
நீண்டகாலமாக ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி மறைவிற்கு பிறகு அவருடைய மகன் ஸ்டாலின் தலைவராகப் பதவியேற்றார். அடுத்து இரண்டாம் கட்ட தலைவர்களாக ஆற்காடு வீராசாமி, அன்பழகன் போன்றார் வயது மூப்பின் காரணமாக விலகி இருக்க, துரைமுருகன், டி ஆர் பாலு, பொன்முடி, வேலு, நேரு உள்ளிட்டோர் முன்னிலையில் இருக்கிறார்கள். இன்னும் பல இரண்டாம் கட்ட தலைவர்கள் இருக்கும் நிலையிலேயே வருகின்ற மக்களவைத் தேர்தலில் சீட்டுகளை ஒதுக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார் ஒரு மாபெரும் தொண்டர்.
அவர் யாரென்று பார்த்தால் திமுகவின் பரிணாம வளர்ச்சி எந்த அளவில் இருக்கிறது என்பது உங்களுக்கு எளிதாக புரிந்துவிடும். விழுப்புரம் மாவட்ட செயலாளரும், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான பொன்முடியின் மகன் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் கேட்டு நிற்க அதனை அந்த தொண்டர் உறுதி செய்து தந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
கூட்டணிக் கட்சியான இந்திய ஜனநாயக கட்சி கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அந்த தொகுதியை விழுப்புரத்தின் வாரிசுக்கு ஒதுக்குவதை உறுதி செய்து கொடுத்துள்ளதாக, அந்த கட்சியின் ஆதரவு ஊடகங்களில் செய்திகள் வெளிவர, திமுக தொண்டர்கள் மெய் சிலிர்த்து போயுள்ளார்கள். தலைவருக்கு என்ன ஒரு தொலைநோக்கு பார்வை, இரண்டாம் கட்ட தலைவருக்கே உத்திரவாதம் அளிக்கும் அளவிற்கு தொண்டருக்கு அதிகாரம் கொடுத்துள்ளார் என புகழ்ந்து வருகிறார்கள்.
யார் இந்த தொண்டர் என்பது உங்களுக்கு பலருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்கிறோம் பிறந்தது முதல் திமுக உறுப்பினராக தொண்டாற்றி வரும், நடிகரும், திமுக தலைவரின் மகனும் ஆன உதயநிதி ஸ்டாலின் தான் அந்த மாபெரும் தொண்டர் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனைவிட ஆச்சரியம் எல்லாம் வேட்பாளர் பட்டியலில் தான் இருக்கிறது, வெளியாகும் வரை காத்திருங்கள்.. திராவிடம், தமிழ், இந்தி எதிர்ப்பு என வளர்ந்த இயக்கத்தின் வளர்ச்சி எந்த அளவில் உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரியும்..