நேற்றைய சந்திப்பில் எடப்பாடி பதவிக்கு வேட்டு வைத்து விட்டு வந்த ஸ்டாலின் : பின்னணி என்ன?!
நேற்றைய சந்திப்பில் எடப்பாடி பதவிக்கு வேட்டு வைத்த விட்டு வந்த ஸ்டாலின்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி பறிபோக வேண்டும் என்பதற்காக தான் காத்திருந்து டீ குடித்ததாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகஅரசின் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்து கொண்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் கூறுகையில், நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தினால்தான், எடப்பாடி அரசு மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசானது கொள்ளை அடிப்பதிலேயே தான் குறியாக உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், இரண்டாயிரம் பேருந்துகள் வாங்கத் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்ததோடு அதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
குறுக்குவழியில் சென்று கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிப்பதற்கு திமுக என்றுமே நினைத்ததில்லை என்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஒருபோதும் துணை போனதும் இல்லை என்றும் அவர் கூறினார்.
நாங்கள் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால், ஒரு நிமிடத்திலேயே ஆட்சியைப் பிடித்திருப்போம் என்றும் தெரிவித்தார். தற்போதைய ஆட்சியானது எம்.எல்.ஏக்களை தக்க வைத்து கொள்வதற்காக தான் மாதம் தோறும் அவர்களுக்கு படியளக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்கு எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஒன்றும் ஆட்சியை நடத்த முடியாது. அவ்வாறு செய்தால் தொடர்ந்து நல்ல ஆட்சியை தர முடியாது என்றும் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது என்றும் ஸ்டாலின் கூறினார்.
பேருந்து கட்டண உயர்வை அதிகப்படுத்தாமலேயே எப்படி நிர்வாகத்தை நடத்துவது என்பதுகுறித்த ஆய்வறிக்கை ஒன்றை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்ததை கூறிய ஸ்டாலின், ஓ.பி.எஸ் முதல்வராக இருக்கும்போது, அவருடன் அமர்ந்து டீ குடித்தேன். அப்போது அவரது முதல்வர் பதவி பறிபோனது.
அதே போலவே தற்போதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் காத்திருந்து டீ குடித்தேன். அவரது பதவி பறிபோக வேண்டும் என்பதற்காகவே காத்திருந்து டீ குடித்தேன் என்றும் ஸ்டாலின் கூறினார். அவரது இத்தகைய பேச்சு அ.தி.மு.கவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
yeterday stalin meet edappadi