தூத்துக்குடியில் பறிபோன 13 உயிர்கள்.. முதல்வர் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்..? டிடிவி தினகரன் ஆதங்கம்..!!
TTV alleged that CM hesitant to take action against firing at Sterlite plant
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீது கடந்த 2018 மே 22ஆம் தேதி காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேற்றப்பட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியின் போது அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கடந்த அக்டோபர் 18 தேதி தாக்கல் செய்யப்பட்டது.
துப்பாக்கி சூடு சம்பவத்தை அரங்கேற்றிய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று 5ம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததன் நினைவு நாள் இன்று.
கடந்த பழனிசாமி ஆட்சியில் நடைபெற்ற இந்த படுபாதக துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், அதில் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் மீது தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டவர்கள் மீதும், உத்தரவை செயல்படுத்தியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவேசமாக கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், பல மாதங்கள் ஆனபிறகும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?
துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 13 பேரின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமே உயிர் நீத்தோரின் தியாகத்துக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்பதை வலியுறுத்துகிறேன்!" என பதிவிட்டுள்ளார்.
English Summary
TTV alleged that CM hesitant to take action against firing at Sterlite plant