முக ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற தேர்தல் அதிகாரி! அவசர அறிவிப்பு வெளியானது!!
Thiruvarur Byelection 2019 : Now Meeting Arranging Collector
தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் வருகிற 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது.
அந்த அறிவிப்பின் படி, வருகிற வருகிற 10 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். பின் 11 ஆம் தேதி வேட்புமனு பரிசீலிக்கப்படும். வேட்புமனுவை திரும்ப பெற ஜனவரி 14 கடைசி தேதியாகும். இதைத்தொடர்ந்து, ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவும், ஜனவரி 31ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து, ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான வேட்பாளரை தேர்வு செய்து அறிவித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் இடைதேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனால் இடைதேர்தலை நடத்தலாமா? வேண்டாமா என்று ஆய்வு செய்து அறிக்கையை இன்று மாலை 5 மணிக்குள் அளிக்குமாறு திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதையடுத்து, இது தொடர்பாக ஸ்டாலின் கோரிக்கை ஒன்று வைத்தார். அதாவது, திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க, அனைத்துக் கட்சிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் முருகதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மதியம் 1 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் வரும்படி மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அறிக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று மாலை தாக்கல் செய்த பிறகு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும். இதையடுத்தே, இடைதேர்தல் நடக்குமா என்பது தொடர்பான விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Thiruvarur Byelection 2019 : Now Meeting Arranging Collector