வந்தவருக்கு வாரி வழங்கிய ஸ்டாலின்! இருந்தவர்கள் காலை வாரிவிட தயாரானதால் திமுக அதிர்ச்சி!
thirupparnagundram DMK
தினகரனை குறிவைத்து அடிக்கிறாரா ஸ்டாலின் என்பது போல அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தினகரனுக்கு அடுத்த தலைவராக இருந்த செந்தில் பாலாஜியை திமுகவில் இணைத்து கொண்ட முக ஸ்டாலின் அவருக்கு கரூர் மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பையும் வழங்கி உற்சாகப்படுத்தினார். அதற்கடுத்த படியாக கோவை தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணித் தலைவராக இருந்த பொன்மலை குமாரசுவாமி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மதுரை மாவட்டம், அமமுக திருப்பரங்குன்றம் ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர் வி.வேட்டையன் தலைமையில் அமமுக மாவட்ட விவசாய அணியின் துணை அமைப்பாளர் முத்துமாரி, கிளைச் செயலாளர் முருகன் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில் இன்று கரூர் மாவட்ட அமமுக மாவட்ட பொருளாளர் வி.ஜி.எஸ்.குமார் திமுக-வில் இணைந்துள்ளார். இந்த இணைப்பு பணிகளை செந்தில் பாலாஜி முன் நின்று செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் திருப்பரங்குன்றத்திலே இடைத்தேர்தலை முன்னிட்டு நிர்வாகிகள் மற்றம் செய்யப்பட்டனர். அதில் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த நாளிலேயே ஒன்றியப் பொறுப்பாளர் பதவி வழங்கியது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தொகுதி குறித்து வெளியான கருத்துக்கணிப்பு ஒன்றில் திமுக 3-ம் இடத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த கட்சித் தலைமை, தொகுதியை திமுகவுக்குச் சாதகமாக மாற்றும் முயற்சியில் அங்கு வாழும் சாதியினரை குறிவைக்க ஆரம்பித்தது. சாதி வாரியாகப் பகுதிகளைப் பிரித்து, அந்தந்த சாதியைச் சேர்ந்த நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டது.
அமமுக.வில் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்த வி.வேட்டையன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காலையில் கட்சியில் இணைய அன்று மாலையிலேயே, வேட்டையனுக்கு திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இது அங்குள்ள திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக்கணக்கில் காத்திருப்போருக்கெல்லாம் பதவி கிடைக்காத நிலையில், ஒரே நாளில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.