அரசியல் விளையாட்டை நடத்திய திமுக! புட்டு புட்டு வைத்த தேமுதிக!!
sudhish says dmk game
வரும் 17 வது மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி ஒன்று அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என் ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுக கூட்டணியில், பாஜகவிற்கு ஐந்து தொகுதிகளும். பாமகவிற்கு 7 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும், தேமுதிகவுக்கு 4 தொகுதியும், புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும், என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தே.மு.தி.க. துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியவை,
பாஜக தலைமையிலான கூட்டணியில் சேருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீட்டில்தான் பிரச்சனை இருந்தது. நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். ராஜ்யசபாயில் ஒரு சீட்டையும் கேட்டும். ஆனால் எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. நாங்கள் விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க., பாஜக கூட்டணியில் தந்ததால் அதை ஏற்றுக்கொண்டோம்.
மேலும் பாஜக தலைவர்கள் எங்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்துள்ளனர். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்ததும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளனர். எனவே அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெரும். நிச்சயமாக மத்திய அரசில் இடம் பெறுவோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம்.
எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. திமுக தரப்பில் இருந்து எங்களை கூட்டணிக்கு அழைத்தனர். அவர்களிடம் நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட விஷயத்தில் திமுகவினர் மிக மோசமான அரசியல் விளையாட்டை தற்போது நடத்தி விட்டனர். துரைமுருகன் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்து இருந்தோம். அரசியலுக்காக அந்த என்றும் நட்பு மாறாது. இப்போதும் நான் அவரை அண்ணன் என்றுதான் அழைக்கிறேன்.
திமுகவிடம் நாங்கள் குழு அமைத்து பேசவில்லை. எங்கள் தரப்பில் இருந்து சென்றவர்கள் அவர்களது சொந்த வேலைக்காக சென்றனர். ஆனால் அரசியலில் அது வேறுமாதிரி பேசப்பட்டு விட்டது.