செந்தில் பாலாஜியின் விசுவாசி திமுகவில் இருந்து விலகல்.!! மு.க ஸ்டாலினுக்கு ஷாக்.!!
Senthilbalaji supporter Tambaram narayanan quite from DMK
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த தாம்பரம் நாராயணன் திமுகவிலிருந்து திடீரென விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "நான் வகித்து வந்த மாவட்ட அமைப்பாளர் பதவியையும், அமைப்புசாரா ஓட்டுனர் சங்க பதவியையும், திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் இன்று முதல் விலகிக் கொள்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது ராஜினாமா கடிதத்தை கழக தலைவரும் முதல் வருமான ஸ்டாலினுக்கு அனுப்பிவிட்டேன். அந்த ராஜினாமா கடிதத்தில் "கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கழக தலைவராக தாங்கள் பொறுப்பேற்று செயல்பட்ட விதத்தையும், மாற்று கட்சிகளுக்கு நீங்கள் கொடுக்க முக்கியத்துவத்தையும் பார்த்து திரு.செந்தில் பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பழனியப்பன் அவர்களால் திமுகவில் இணைந்ததற்காக 12.7.2021 அன்று திரு சபரீசன் அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மாவட்ட செயலாளர் தாமு அன்பரசன் அவர்கள் முன்னிலையில் 21.7.2021 முதல் தாம்பரம் நாராயணனாகிய ஆகிய நான் முழுமையாக கழகத்தில் இணைந்தேன்.
தாம்பரம் பல்லாவரம் ஆலந்தூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அமமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களை கழகத்தில் இணைத்தேன். இவை அனைத்தும் பத்திரிகைகளில் செய்தியாக வந்தன. மேலும் தங்களின் கட்டளையின்படி மூன்று சட்டமன்ற தொகுதிகளில் 1500 புது உறுப்பினர்களை முகாம் நடத்தி கழகத்தில் புதிதாக சேர்த்து உறுப்பினர் அட்டை வாங்கி சம்பந்தப்பட்டவர்களுக்கு விநியோகம் செய்து இருக்கிறேன்.
தமிழ்நாடு இளைஞர் ஜனதா தள தலைவராகவும், பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியில் மாநில செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளராக பத்தாண்டுகளுக்கு மேலும், அமமுகவில் மாநில அம்மா பேரவை செயலாளராகவும், மாநில செய்தி தொடர்பாளர் மற்றும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமமுக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டது என பல்வேறு அனுபவங்களை கொண்ட நான் நமது கழகத்தில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.
எனது தகுதிக்கேற்ப கடந்த மூன்று ஆண்டுகளில் என்னை முழுமையாக கட்சி பயன்படுத்திக் கொள்ளவில்லை. என் நிலையில் எனது நீண்ட அனுபவம் மற்றும் திறமையும் பயன்படாத இடத்தில் நான் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை. எனவே நான் கழகத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதையே எனது ராஜினாமா கடிதமாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தாம்பரம் நாராயணன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய தாம்பரம் நாராயண திமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதிலும் திமுக தலைமை தவிர வேறு யாரும் ஆர்வம் காட்டவில்லை. திமுகவை சேர்ந்ததன் மூலம் மூன்று ஆண்டுகள் வீணடித்து விட்டேன். எனக்கு திமுகவில் யார் மீதும் வருத்தமில்லை. கட்சியின் மூலம் ஏராளமான நல்ல நண்பர்களை பெற்றுள்ளேன். அவர்களை விட்டு விலகி செல்வது தான் எனக்கு வருத்தம் அளிக்கிறது. எனது ராஜினாமா கடிதத்தை திமுக தலைவருக்கு அனுப்பி விட்டேன். இன்று முதல் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
Senthilbalaji supporter Tambaram narayanan quite from DMK