கட்சி, கூட்டணி இதனையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஒரே ஒரு நிமிடம்!
parties manifesto about neet exam
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கைகளை தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளும் இன்று வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கைகள் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளின் அறிக்கைகள் மட்டுமே. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகள் தனி தனியாக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
இன்று வெளியான அறிக்கைகளை திமுக, அதிமுகவின் தமிழக நலன் நோக்கிய அறிக்கையாக மட்டுமே பார்க்கலாமேயன்றி, அதனைத் தாண்டி ஒன்றுமில்லை. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசை சுயமாக அமைக்கும் அளவிற்கோ, இவர்களது தலைமையில் மத்திய அரசு அமைவதற்கோ வாய்ப்பில்லை. ஏனெனில் இரண்டு கட்சிகளுமே 20 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு வேண்டும் என்பது அனைத்துக் கட்சியினரும் வைத்த கோரிக்கை. இருப்பினும் மத்திய அமைச்சரவையின் (எந்த கூட்டணியாக இருந்தாலும்) ஒற்றைக் கையெழுத்தில், தீர்மானத்தால் இது சாத்தியமாகாது. உச்ச நீதி மன்ற தீர்ப்பை சட்டப்படி எதிர் கொண்டு சீராய்வு செய்தே சாத்தியப்படுத்த முடியும். ( நீட் தேர்விற்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை வழக்கினை தொடர்ந்து தடுக்க முடியாமல் பாட்டாளி மக்கள் கட்சி தவித்தது குறிப்பிடத்தக்கது).
மேலும், நீட் தேர்விற்கு ஆதாரக் காரணமான இந்திய மருத்துவக் குழு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மாற்றியமைக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழ் நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, மற்ற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, நீட் விவகாரத்தில் இரு கட்சிகளும் கொடுத்துள்ள வாக்குறுதி அவர்களது நோக்கத்தைக் காட்டுவதேயன்றி செயல்படுத்தும் வலிமையை அல்ல. அதே போல கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலங்கள் பட்டியலுக்கு மாற்ற போதுமான பலம் இரு அவைகளிலும் தேவை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் நீட் தேர்வு ரத்து என விளம்பரம் செய்யபடுகிறது.
அதிமுக கூட மத்திய அரசை வலியுறுத்தும் என கூறியது. ஆனால் திமுகவோ ஒருபடி மேலே சென்று நீட் தேர்வு ரத்து என்றே அறிவித்துவிட்டது. ஆனால் இதனை அறிவிக்க வேண்டிய இந்திய அளவில் கூட்டணி தலைமையான பாஜக, காங்கிரஸ் தான் அறிவிக்க மறுக்கிறது. ரத்து என்று அறிவித்த திமுக இடம்பெற்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தான் நீட் தேர்வை கொண்டு வருவதற்கான முன்வரைவை கொண்டு வந்தது என்றால் ஆச்சர்யமளிக்கிறதா, ஆனால் அது தான் உண்மை எனவும் கூறப்படுகிறது.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது, ஒருவேளை ரத்து செய்யப்படவில்லை என்றால் அதனை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள தேவையான கல்வி கொள்கை, அதனை எந்த கட்சிகள் வலியுறுத்தியுள்ளது என்பதை மக்கள் பார்க்க வேண்டும். மற்ற கட்சிகளின் மீது மக்களின் எதிர்ப்பு உணர்ச்சிகளை பயன்படுத்தி, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வாக்குகளை கொள்ளை அடிக்கும் அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியில் மக்கள் சிக்காமல் சிந்திக்க வேண்டும்.. வாக்களிக்க வேண்டும்...
English Summary
parties manifesto about neet exam