ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என கூறிய ஸ்டாலின் தற்போது அதிலிருந்து பின்வாங்குகிறாரா?
MK Stalin Speech
கொல்கத்தாவில் ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற பெயரில் மம்தா பானர்ஜி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ், குமாரசாமி, தேவகவுடா, முக ஸ்டாலின், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, அரவிந்த கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்), மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ்) உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த பிரமாண்ட மாநாட்டில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெங்காலியில் தனது உரையை தொடங்கி உரையாற்றினார். அப்போது, பாஜகவிடம் இருந்து இந்தியாவை மீட்பதுதான் உண்மையான சுதந்திர போராட்டம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுபோல் நாம் வேறு மாநிலங்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் போராடி பாஜகவை வீழ்த்த வேண்டும். எதிரிகளே இல்லை என கூறிய பிரதமர் மோடிதான் எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார்; நம் ஒற்றுமையால் அவருக்கு பயம் வந்துவிட்டது. நாம் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என ஸ்டாலின் பேசினார்.
அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே, மக்களவை தேர்தல் முடிந்த பிறகு தான் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.
இந்நிலையில், சோழிங்கநல்லூர் இன்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினர். பின் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது,
சென்னையில் திமுக நடத்திய கூட்டத்தில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலித்தோம். ஒவ்வொரு மாநிலத்திலும் சூழல் வேறுபடுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் பிரதமரை தேர்வு செய்யலாம் என மேற்கு வங்கத்தில் எண்ணுகிறார்கள். ஆகையால் நான் மேற்கு வங்கத்தில் இது குறித்து பேசவில்லை, இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்ற நிலைப்பாட்டில் ஸ்டாலின் உறுதியாக இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.