சொன்னபடி வந்த விவசாயிகள்! ஆதரவளித்த பாமக! தோல்வியடைந்த அமைச்சர் முயற்சி!
farmers meeting with minister is end failure
தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரப் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் உழவர்களின் அனுமதி பெறாமல், உழவர்களின் விளை நிலங்களில் அளவீடு செய்வது உள்ளிட்ட பணிகளை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் செய்து வந்தனர். பின்னர் சில தினங்களுக்கு முன் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஜனவரி 2 ஆம் தேதி தொடங்க இருக்கும் சட்டமன்றத்தை 3 ஆம் தேதி முற்றுகையிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அறிவித்தனர். இந்த போராட்டத்திற்கு பாமக ஆதரவளிக்கும் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கடந்த 30 ஆம் தேதி சந்தித்த பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி அறிவித்தார்.
இத்தகைய மின்பாதைகள் கேரளத்தில் சாலையோரங்களில் பூமிக்கு அடியில் அமைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, இந்தப் பாதைகள் சென்னை, சேலம், மதுரை, கோவை ஆகிய நகரங்களைக் கடந்து செல்லும் போது கூட பூமிக்கு அடியில் தான் கேபிள்கள் புதைக்கப்படுகின்றன. இதேபோல், ஒட்டுமொத்த மின்பாதைகளையும் சாலையோரத்தில் பூமிக்கு அடியில் கேபிள்களை புதைத்து செயல்படுத்த வேண்டும்; அதன் மூலம் உழவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வந்து சந்தித்தால் பேசி தீர்க்கலாம் என தமிழக அமைச்சர் தங்கமணி அறிவித்து இருந்தார்.
விவசாயிகள் அறிவித்தபடி இன்று சென்னை சேப்பாக்கத்தில் போராட வருகைதந்துள்ள விவசாய சங்கங்களின் கூட்ட இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் விவசாயிகளிடம் பா.ம.க தலைவர் ஜிகே மணி ஆதரவு தெரிவித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் உயர்மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக, தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கமணியுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும், தோல்வியில் முடிந்துள்ளது எனவும் விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும் விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கபடும் என அறிவித்துள்ளார்கள்.
English Summary
farmers meeting with minister is end failure