சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை: உச்சநீதிமன்றம் சென்றார் அன்புமணி இராமதாஸ்.!!
Dr Anbumani appeal to sc for salem to chennai green corridor
சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்த திட்டத்திற்கான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம், பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு மாநில அரசும் ஒப்புதல் வழங்கி, இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். மேலும், தர்மபுரி எம்.பி., அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், விவசாயிகள் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த திட்டத்திற்கு தடை கேட்டும், திட்டத்தை ரத்து செய்ய கோரியும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ''சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என உத்தரவிட்டனர். 15 கேள்விகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும்'' அதிரடியாக தீர்ப்பை வழங்கினர்.
இந்நிலையில், சென்னை, சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக, பாமக இளைஞரணி தலைவரும், தருமபுரி மக்களவை உறுப்பினருமான அன்புமணி இராமதாஸ் இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று அந்த மனுவில் அன்புமணி இராமதாஸ் குறிப்பிட்டு உள்ளார்.
English Summary
Dr Anbumani appeal to sc for salem to chennai green corridor