திமுகவின் தோழமை கட்சிகளின் நிலை என்ன? தொகுதி பங்கீடு குறித்து பரபரப்பு பேட்டி.!!
dmk alliance party
வரும் மக்களவை தேர்தலுக்காக தமிழக அரசியலில் தற்போதைய நிலவரப்படி அமைந்து உள்ள கூட்டணி என்று பார்த்தல், அது அதிமுக-பாஜக-பாமக-இந்திய ஜனநாயக கட்சி இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் மேலும், தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.
இந்த அதிமுக தலைமையிலான கூட்டணி அறிவிப்புக்கு பின், திமுகவின் கூட்டணி அறிவிப்பு தான் தமிழகத்தில் அதிக எதிர்பார்ப்புகளை உண்டாகியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டுமே உறுதியாகியுள்ள நிலையில், தோழமை கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளதா இல்லையா என்பதே இன்னும் உறுதியாகவில்லை.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், நேற்று சென்னை அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கி உள்ளதாக முக ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் காங்கிரசுடன் தேர்தல் உடன்படிக்கையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக உடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூ மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். மேலும், போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் தெரிவித்திருப்பதாக பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
இதற்கிடையே, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக மாலையில் திமுக- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.