சட்டப்பேரவை செயலாளருக்கு கடிதம் எழுதிய தினகரன் : அதிர்ச்சியில் எடப்பாடி!
சட்டப்பேரவை செயலாளருக்கு கடிதம் எழுதிய தினகரன்
தனக்கு ஊதிய உயர்வு தேவை இல்லை என்று தமிழக சட்டப்பேரவை செயலாளருக்கு டி.டி.வி.தினகரன் கடிதம் எழுதி உள்ளார்.
புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்பட்டு வருவதாக எம்எல்ஏக்கள் பலர் சட்டப்பேரவையில் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இத்தகைய சம்பள உயர்வு அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நடைபெற்ற சட்டசபையில் அறிவித்தார். மேலும் பயணப்படி உள்ளிட்ட படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பள உயர்வானது வரும் ஜூலை மாதம் 1-ம் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதா தாக்கல் செய்ததற்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என்று சட்ட பேரவை செயலாளரிடம் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரான டி.டி.வி.தினகரன் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் அவர் அந்த கடிதத்தில் தமிழக அரசில் நிதி பிரச்சினை நிலவும் இத்தகைய நிலையில் ஊதிய உயர்வு தேவையற்றது என்று விளக்கம் அளித்துள்ளார்.
இவ்வாறு திடீரென சட்ட பேரவை செயலாளருக்கு தினகரன் கடிதம் எழுதியதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர் அதிமுக எம்எல்ஏக்கள்.
English Summary
dinakaran wrote letter for Legislative Secretary