தை பிறக்கட்டும்...தீமைகள் ஒழியட்டும் : டாக்டர் ராமதாஸ் அவர்களின் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
தை பிறக்கட்டும்...தீமைகள் ஒழியட்டும் : டாக்டர் ராமதாஸ் அவர்களின் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
இன்று அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தை பிறக்கட்டும்... தீமைகளிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்.இந்த பொங்கல் திருநாளில் நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் பெருவிழாவையும், தமிழ் புத்தாண்டையும் உற்சாகத்துடன் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர்களுக்கு ஆயிரம் திருவிழாக்கள் இருந்தாலும் அவற்றில் முதன்மைத் திருநாள் தைப் பொங்கல் தான். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. அதுமட்டுமின்றி, மதங்களைக் கடந்த திருநாள் என்ற பெருமையும் பொங்கலுக்கு உண்டு.
இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர்கள் வீடுகளில் தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.
பொங்கல் கொண்டாட்டத்தின் அடையாளங்களான கரும்பு, சர்க்கரைப் பொங்கல், வாழைப்பழம் உள்ளிட்ட அனைத்தும் இனிப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பொருட்களாகும். ஆனால், உண்மையில் தமிழருக்கும், இந்தத் திருவிழாவின் கதாநாயகர்களான உழவர்களுக்கும் இத்திருநாள் இனிப்பானதாக அமையவில்லை.
ஒருபுறம் உழவர்கள் விளைவித்து வழங்கிய கரும்புக்கு வழங்கப்பட வேண்டிய கொள்முதல் விலை பாக்கி இன்னும் வழங்கப்படவில்லை. மற்றொரு பக்கம் ஓராண்டுக்கு முன் வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர் பெருமக்களுக்கு இன்று வரை பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. மக்களும், உழவர்களும் இவ்வாறு திண்டாடிக் கொண்டிருக்க தமிழகத்தின் நீரோ மன்னர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலை மாறி அனைத்துத் தரப்பு மக்களும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்; அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்..... அதேபோல், இந்த தமிழ் புத்தாண்டு தமிழக மக்களுக்கு அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் விடுதலை கிடைக்க வேண்டும். அதற்காக உழைக்க அனைவரும் இந்நாளில் உறுதியேற்க வேண்டும்.
English Summary
Congratulations to Dr Ramadoss's pongal and new year