மருத்துவரிடம் உதவி கேட்டு பண மோசடியில் ஈடுபட்ட அமெரிக்க பெண் - போலீசார் வலைவீச்சு.!
us woman money fraud to puthuchery doctor
மருத்துவரிடம் உதவி கேட்டு பண மோசடியில் ஈடுபட்ட அமெரிக்க பெண் - போலீசார் வலைவீச்சு.!
புதுச்சேரியில் உருளையன் பேட்டை பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, திருமணம் செய்வதற்காக பெண் தேடி அவரது பெற்றோர்கள் தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை சேகரித்துக்கொண்டு சமூக வலைதள மோசடிக்காரர்கள், ஒரு பெண் மூலம் மருத்துவ பேராசிரியரை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அந்த பெண் தான் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் தற்போது சிரியாவில் நடைபெற்ற நிலநடுக்கத்திற்காக தன்னார்வலராக வேலை செய்ய வந்துள்ளதாகவும், தான் ஒரு இந்தியரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி தன்னுடைய அனைத்து விவரங்களையும் மருத்துவருக்கு அனுப்பியுள்ளார்.
மேலும், தான் சிரியாவிற்கு வந்த பிறகு அமெரிக்கர் என்பதால் தன்னுடைய அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு விட்டதாக கூறி, வங்கி கணக்குகள் கணக்குகள் முடக்கப்பட்ட விவரங்கள், தங்கியிருக்கும் இடத்திற்கான லொகேஷன், அவர் பணிபுரிகின்ற மருத்துவமனை உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து நீங்கள் உதவி செய்தால் மட்டுமே நான் இங்கிருந்து வெளியேற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய மருத்துவ பேராசிரியர் அந்த பெண்ணுக்கு ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார். இந்தப் பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு, அந்த பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அதன் பின்பு தான், தான் ஏமாற்றப்பட்டதை மருத்துவர் உணர்ந்தார். உடனே அவர் இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பண மோசடியில் இந்தியாவில் உள்ள சில நபர்களும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் சந்தேகபட்டு விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
us woman money fraud to puthuchery doctor