நாளை முதல் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி ஏறவும் வாய்ப்பு!
நாளை முதல் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி ஏறவும் வாய்ப்பு!
மத்திய அரசு நாள்தோறும் டீசல் விலையை உயர்த்தி வருவதற்கும், சுங்கக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, நாளை திங்கள்கிழமை (ஜூன் 18) முதல் நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.சுகுமார் கூறியதாவது,
ஒரே நேரத்தில் டீசல் விலை, சுங்கக் கட்டணம், மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை என அனைத்தையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் எங்களுக்கு தொழில் செய்ய முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும், பலமுறை தொடர்புடைய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித சுமூகத் தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை.
இதன் காரணமாக கடந்த ஏப்ரல் 7 -ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, மத்திய அரசிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அப்போது சிறிது கால அவகாசம் அதிகாரிகள் தரப்பில் கேட்கப்பட்டதையடுத்து வேலைநிறுத்த முடிவு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
இதுதொடர்பாக 2 முறை நினைவூட்டல் கடிதமும், கோரிக்கைகள் தொடர்பான கடிதமும் கொடுத்ததும் மத்திய அரசிடம் இருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை. இதையடுத்து வேறுவழியின்றி, நாடு முழுவதும் டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக தமிழகத்தில் 500000 லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதனால் காய்கறி பால் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏறக்கூடும் என்றும் தட்டுப்பாடு வரும் என்றும் கூறப்படுகிறது.
English Summary
tomorrow start lorry strike