தற்கொலை அல்ல கொலை தான்?.........தலையில் இருக்கும் ரத்த காயத்தால் மாணவர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!
தற்கொலை அல்ல கொலை தான்?
டெல்லியில் உள்ள யூ.சி.எம்.எஸ் மருத்துவமனையில் மர்மமான முறையில் இறந்த கிடந்த தமிழக முதுகலை மாணவர் சரத்பிரபு தலையில் ரத்தக் காயம் இருந்ததால் அது கொலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பாறைப்பாளையத்தைச் சேர்ந்தவர் சரத்பிரபு என்ற மாணவர் + 2 தேர்வில் 1187 மதிப்பெண்கள் பெற்றார். அதனையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பயின்றார்.
இந்த நிலையில் அவர் முதுகலை படிப்பிற்காக கடந்த ஜூன் மாதம் டெல்லியிலுள்ள யூ.சி.எம்.எஸ் கல்லூரியில் படித்து வந்தார். திடீரென சரத்பிரபு கழிவறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு நேற்று போன் வந்துள்ளது.
அதனையடுத்து டெல்லியிலுள்ள மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் சரத் பிரபு இன்று காலை இறந்து விட்டதாக வந்த தகவலை கேட்டு அவரது உறவினர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்த ஜிடி கார்டன் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையின் போது சரத்பிரபுவின் உடல் அருகே சிரிஞ்சிகள், இன்சுலின் பாட்டில் மற்றும் பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இந்த நிலையில் அவரது தலையில் ரத்த காயத்தை காவல்துறையினர் கண்டுள்ளனர். இதன் மூலம் அவர் தற்கொலை செய்திருக்கமாட்டார் என்றும் மாணவர் சரத்பிரபு சாவில் மர்மம் இருப்பதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கல்லூரிக்கு அருகேயுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தான் மரணமடைந்த சரத்பிரபு, அரவிந்த் மற்றும் கார்த்திகேயன் உள்பட தமிழகத்தை சேர்ந்த நான்கு மாணவர்கள் தங்கியிருந்தனர்.
அதில் ஒரு மாணவர் மட்டும் பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை சரத் பிரபு தங்கி இருந்த அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அரவிந்த் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
அதனையடுத்து அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அவரை சேர்க்கும் போதே அவருக்கு உயிர் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அரவிந்த் ஆகியோரை தனி அறையில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் கார்த்திகேயன் மட்டும் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்துள்ளதாக தெரிகிறது.
மாணவர் சரத்பிரபுவின் உடலை பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே உண்மை தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
English Summary
student sarathprabu murder?