பெண் டாக்டர் கொலை..! மருத்துவர்கள் எடுத்த அதிரடி முடிவு.. கேரள நோயாளிகள் அதிர்ச்சி..!!
Kerala doctors have decided to go on strike
கேரள மாநிலம் கொட்டாரக்காரா பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சந்தீப் மதுவிற்கு அடிமையாகி ஏராளமான போதைப் பொருட்களையும் உட்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் இவர் குடும்பத்தினருடன் நேற்று இரவு தகராறில் ஈடுபட்டதோடு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடமும் அவர் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கொட்டாரக்காரா போலீஸாருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த போலீஸார் இரவோடு இரவாக சந்தீப்பை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் சந்தீப்பை இன்று அதிகாலை மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்காரா தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் வந்தனா தாஸிடம் சந்தீப் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடிய கத்திரிக்கோலை எடுத்து பெண் மருத்துவர் வந்தனா தாஸை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே மருத்துவர் வந்தனா உயிரிழந்தார். இதை சற்றும் எதிர்பாராத போலீஸார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக சந்தீப்பை பிடிக்க முயன்றனர். அப்போது பிடிக்க முயன்ற போலீஸார் மற்றும் மருத்துவமனை ஊழியர்களையும் சந்தீப் கத்திரிக்கோலால் குத்தியுள்ளார்.
இதனால் அவர்களும் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என அனைத்து பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் மருத்துவர்கள் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கேரளாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, நடைபெற்று வரும் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், இந்த அறிவிப்பு பொது மக்களையும், நோயாளிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Kerala doctors have decided to go on strike