பாதுகாவலரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த முதலமைச்சர் : வைரலாகும் வீடியோ!
பாதுகாவலரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த முதலமைச்சர்
மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பிரச்சார கூட்டத்தில் தனது பாதுகாவலரை கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக உள்ளார். அம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சர்தார்பூர் எனும் நகரில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது ஒரு பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது பாதுகாவலரை கோபமாக கன்னத்தில் அறைந்தார்.
அதோடு மட்டுமல்லாமல் அவரை அங்கிருந்து போகும்படி தள்ளி விட்டார். முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைப் பார்த்த பலர் பாதுகாவலரின் கடமையை செய்ய விடாமல் அடித்துள்ள முதலமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தேர்தல் நேரத்தில் இந்த வீடியோவானது இணையத்தில் வைரலானதால், இத்தகைய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.கவின் தரத்தை குறைக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.