அவர் என்ன மருத்துவரா அல்லது விஞ்ஞானியா? : வெளுத்து வாங்கிய கடம்பூர் ராஜூ!
நிலவேம்பு கசாயம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசுவதற்கு அவர் என்ன மருத்துவரா அல்லது விஞ்ஞானியா?
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிட திறப்புவிழா நடைபெற்றது. இந்த நிகழிச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
நிலவேம்பு கசாயம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசுவதற்கு அவர் என்ன மருத்துவரா அல்லது விஞ்ஞானியா? எதுவும் கிடையாதே. பல்வேறு மூலிகைகள் கொண்ட இந்த நிலவேம்பு கசாயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. அனைத்து இடங்களிலும் நிலவேம்பு கசாயம் விநியோகிக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. நிலவேம்பு கசாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் பீதியை ஏற்படுத்துவதில் யாரும் ஈடுபடக்கூடாது. அது யாராக இருந்தாலும் அந்த செயலை தவிர்க்க வேண்டும்.
தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் குறித்து ரத்தப் பரிசோதனை செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 24 ரத்தம் பரிசோதனை செய்யும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளின் மூலம் 40 வினாடிகளில் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு நோய் இருப்பது கண்டறியப்படும்.
காய்ச்சல் ஏற்பட்டால் அரசு மருத்துவமனைக்கு தான் முதலில் செல்ல வேண்டும். டெங்கு காய்ச்சலினால் ஏற்படும் உயிரிழப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. இன்னும் 10, 15 நாட்களில் முழுமையாக டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும். டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
English Summary
Minister kadambur Raju angry about Actor Kamal Hassan