நில வேம்பு கசாயத்தை நான் எதிர்க்கவில்லை : நடிகர் கமல் திடீர் பல்டி..!
நில வேம்பு கசாயத்தை நான் எதிர்க்கவில்லை
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால், நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இதனால், தமிழகம் முழுவதும் நில வேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. தனியார் அமைப்புகள், அரசியல் கட்சிகள் தவிர தமிழக அரசே நில வேம்பு கசாயத்தை பரிந்துரைத்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில், சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும், என்று கூறியுள்ளார்.
அதே போன்று அடுத்த பதிவில், ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான், என்று கூறியுள்ளார்.
இதனால், அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாது பலதரப்பட்ட மக்களும் நில வேம்பு கசாயத்தை விநியோகிப்பதை நிறுத்த தொடங்கியுள்ளனர். ஆனால், கமலின் இந்த கருத்துக்கு தமிழக அரசும், சித்த மருத்துவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல் தன்னுடைய டிவிட்டர் பதிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நில வேம்பு கசாயத்தை நான் எதிர்ப்பதாக செய்திகள் பரவுவதில் நியாயமில்லை. டாக்டர்கள் அறிவுரை இல்லாமல் என்னுடைய இயக்கத்தினர் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை.
அளவில்லாமல் நில வேம்பு கசாயத்தை கொடுக்கப்படுவதை தவிர்க்கவே விநியோகிக்க வேண்டாம் என்று கூறினேன். மக்களுக்கு நல்லதை யார் செய்தாலும் நான் போற்றுவேன்.
நான் சித்த மருத்துவம், அலோபதி மருத்துவம் என்று தனிப்பட்ட சார்பு கொண்டவனல்ல. கேரளாவை பார்த்து டெங்குவை கட்டுப்படுத்துவதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Actor Kamal explains to opposed nila vembu kashayam